கோதுமை மாவு குழியப்பம்
தேவையானவை:
கோதுமை மாவு – முக்கால் கப், அரிசி மாவு – கால் கப், பொடித்த வெல்லம் – அரை கப், நன்கு பழுத்த பூவன் பழம் – ஒன்று, ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், துருவிய தேங்காய் – ஒரு டேபிள்ஸ்பூன், பொடித்த சர்க்கரை – 2 டீஸ்பூன், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு, உப்பு – ஒரு சிட்டிகை.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, உப்பு, தேங்காய் துருவல், வாழைப்பழத் துண்டுகளைப் சேர்த்து பிசைந்து கொள்ளவும். வெல்லத்தில் ஒரு கப் நீர் ஊற்றி, நன்கு கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். கோதுமை மாவு கலவையுடன் வெல்லக் கரைசல், ஏலக்காய்த்தூள் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கலக்கவும். குழிப் பணியாரக் கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காயவிடவும். பின்பு அடுப்பை தணித்து, சிறு குழிக்கரண்டியால் மாவை எடுத்து ஒவ்வொரு குழியிலும் ஊற்றவும். அப்பங்கள் சிவந்ததும் அப்பக் குத்தியால் இதை திருப்பிப் போடவும். அப்பங்கள் நன்கு சிவந்து பொன்னிறமானதும் கரண்டியால் எண்ணெயை வடிகட்டி, வடிதட்டில் போடவும். இதைப் போல் முழு மாவையும் அப்பங்களாக செய்து ஒரு பாத்திரத்தில் போடவும். மேலாக நெய், பொடித்த சர்க்கரை போட்டு நன்றாக குலுக்கி பரிமாறவும்.