தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா சமீப காலமாக நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், பேமிலிமேன் 2 வெப் தொடரில் சர்ச்சை கதாபாத்திரத்தில் நடித்து எதிர்ப்புக்கும் உள்ளானார். தற்போது சமந்தா நடித்துள்ள யசோதா படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இப்படத்தின் டிரெய்லரை தமிழில் சூர்யா, தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, கன்னடத்தில் ரஷ்கித் ஷெட்டி, மலையாளத்தில் துல்கர் சல்மான், இந்தியில் வருண் தவான் ஆகியோர் வெளியிட்டு உள்ளனர்.
இந்நிலையில், நடிகை சமந்தா தனது ரசிகர்களுக்கு தான் மயோசிடிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கபட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராமில், சமந்தா தனது மணிக்கட்டில் டிரிப்சுடன் படுக்கையில் அமர்ந்திருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். ஒரு மைக் அவருக்கு முன்னால் உள்ளது. நடிகை முதுகை காட்டியபடி இருந்தார். தன் முகத்தை வெளிப்படுத்தாவிட்டாலும், கைகளால் இதய சிம்பலை அடையாளபடுத்தினார். கையில் டிரிப்ஸ் ஏற்றிக் கொண்டே யசோதா படத்திற்கு நடிகை சமந்தா டப்பிங் பேசியுள்ளார். இதுதொடர்பான அவரது இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அதில், “யசோதா டிரெய்லருக்கான உங்கள் கருத்து அமோகமாக இருந்தது. உங்கள் அனைவருடனும் நான் பகிர்ந்து கொள்ளும் இந்த அன்பும் தொடர்பும் தான், வாழ்க்கை என் மீது வீசும் முடிவில்லாத சவால்களைச் சமாளிக்க எனக்கு வலிமை அளிக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு எனக்கு இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறையும் (மயோசிடிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன்) நோய் இருப்பது கண்டறியப்பட்டது. அது நிவாரணம் அடைந்த பிறகு இதைப் பகிரலாம் என்று எதிர்பார்த்தேன்.ஆனால் நான் எதிர்பார்த்ததை விட சற்று அதிக நாள் எடுத்துக்கொள்கிறது. நான் இன்னும் போராடிக்கொண்டிருக்கிறேன். நான் விரைவில் பூரண குணமடைவேன் என்று மருத்துவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். எனக்கு நல்ல நாட்களும் கெட்ட நாட்களும் இருந்தன. உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும்… என்னால் எப்படியோ அந்த தருணம் கடந்து செல்கிறது. நான் குணமடையும் நாளை நெருங்கிவிட்டேன் என்று நினைக்கிறேன். நான் உங்களை நேசிக்கிறேன்… இதுவும் கடந்து போகும்.” என பதிவிட்டுள்ளார்.