

அட்லீ இயக்கும் ஷாருக்கான் படத்திலிருந்து நடிகை நயன்தாரா விலகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் அட்லீ பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து ‘லயன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் தொடங்கியது. இரட்டைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா, சான்யா மல்ஹோத்ரா நடிக்கிறார்கள். யோகி பாபு, பிரியாமணி முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்று தகவல் வெளியாகி இருந்தது.

ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்டதால், அக்டோபர் மாதம் முழுக்க ஷாருக்கானால் அட்லீ பட ஷூட்டிங்கில் கலந்துகொள்ள முடியவில்லை. இந்தநிலையில் நயன்தாரா ‘பிரேமம்’ இயக்குநரின் புதிய படம், ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’,ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் பெயரிடாதப்படம் என பிஸியாக நடித்து வருகிறார்.
அக்டோபர் மாதம் அட்லீ படத்திற்கு கால்ஷீட் ஒதுக்கி இருந்தார் நயன்தாரா. ஆனால், ஷூட்டிங் நடைபெறாததால், நயன்தாராவின் தேதிகள் வீணாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மீண்டும் அட்லீ படப்பிடிப்பு துவங்கினாலும் வெவ்வேறு படங்களுக்கு நயன்தாரா கால்ஷீட் ஒதுக்கியுள்ளதால், அப்படங்களில் நடித்தே ஆகவேண்டிய நெருக்கடியில் நயன்தாரா இருக்கிறார். இந்தக் காரணங்களைச் சொல்லித்தான் நயன்தாரா விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
நயன்தாராவும் சமந்தாவும் இணைந்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்கள். நடிகை சமந்தா ஏற்கனவே, அட்லி இயக்கத்தில் விஜய்யுடன் ‘தெறி’, ’மெர்சல்’ உள்ளிட்டப் படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார். தற்போது விவாகரத்திற்குப் பிறகு ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இரண்டு படங்களில் சமந்தா நடித்து வருகிறார். அவரது நடிப்பில் விரைவில் ‘சகுந்தலம்’ படம் வெளியாகவிருக்கிறது.
