இலங்கையில் நடந்துவரும் போராட்டத்தில் உச்சகட்டமாக வன்முறை வெடித்து ஆளுங்கட்சி எம்.பி உயிரிழந்துள்ளார்.
இலங்கை பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் தலைநகர் கொழும்புவை தொடர்ந்து பல்வேறு நகரங்களில் கலவரம் வெடித்தது. ஏற்கனவே ராஜினாமா செய்வதாக அறிவித்த ராஜபக்சே பின்பு மறுப்பு தெரிவித்த நிலையில் தற்போது ராஜினாமா செய்தார். பதவி விலகல் கடிதத்தை இலங்கை அதிபரும் தனது இளைய சகோதரருமான கோத்தபயவிடம் மகிந்த ராஜபக்சே வழங்கியுள்ளார்
இலங்கை தலைநகர் கொழும்புவை தொடர்ந்து பல்வேறு நகரங்களில் கலவரம் வெடித்தது. இலங்கை முழுவதும் பதற்றம் அதிகரிப்பதை அடுத்து விடுமுறையில் உள்ள அனைத்து காவலர்களும் பணிக்கு திரும்ப இலங்கை அரசு உத்தரவிட்டது. நிட்டாம்புவா என்ற இடத்தில் ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்கப்பட்டதை அடுத்து கூட்டத்தை கலைக்க போலீஸ் கண்ணீர் புகை குண்டு வீசினர். தொடர்ந்து நிட்டாம்புவாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் காயமடைந்தனர். அதில் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார். இதனிடையே போராட்டக்காரர்கள், ராஜபக்சே ஆதரவாளர்கள் இடையே நடந்த மோதலில் ஆளுங்கட்சி எம்.பி. அமரகீர்த்தி அத்துகொரலா உயிரிழந்தார்.
கொழும்பில் கலவரத்தை கட்டுப்படுத்த முப்படை வீரர்களும் ஈடுபடுத்தப்படுவதாக பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. முப்படை வீரர்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கும் படி இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.