ஆர்எஸ்எஸ் அமைப்பின் சித்தாந்தங்கள் கரையானைப் போல் நாட்டின் அமைப்பு முறையை சத்தமில்லாமல் அழிக்கின்றன என்று காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. திக்விஜய் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் மாநில பத்திரிகையாளர் சங்கம் சார்பில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி. திக்விஜய் சிங் பங்கேற்றார்.அப்போது அவர் பேசியதாவது: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசுவதைக் கேட்டிருக்கிறார்களா, எப்போதுமே இந்து முஸ்லிம் பிரிவினை,இடுகாடு, சுடுகாடு இதைப்பற்றித்தான பேசுவார். ஆர்எஸ்எஸ் அமைப்பை எடுத்துக்கொள்ளுங்கள் அது கரையானைப் போன்றது. வீடுகளில் கரையான் சத்தமில்லாமல் பொருட்களை சேதப்படுத்துவது போன்று நாட்டின் அமைப்பு முறையை ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்கள் சேதப்படுத்தி,அழிக்கின்றன
ஆர்எஸ்எஸ் அமைப்பை , கரையானுக்கு ஒப்பீடாக பேசுவதால் நான் கடுமையாக விமர்சிக்கப்படுவேன் என்பது தெரியும். ஆனால், ஆர்எஸ்எஸ் அமைப்பை கரையான் எனச் சொல்லவில்லை, அதன் சித்தாந்தங்கள்தான் கரையானைப்போல் சத்தமில்லாமல் நாட்டின் அமைப்பு முறையை அழிக்கின்றன என்கிறேன். உத்தரப்பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கிறது. அங்கு செல்லும்போது, பத்திரிகையாளர்கள் முதல்வர் யோகியின் பேச்சை கவனமாகக் கேளுங்கள். அவர் இந்து முஸ்லிம், இந்தியா-பாகிஸ்தான், எரியூட்டுமிடம், புதைக்குமிடம் இதைத்தவிர வேறு ஏதாவது பேசியிருக்கிறாரா.
இந்து மதம் ஆபத்தில் இருக்கிறது என தவறான கருத்துக்களைப் பரப்பப்படுகின்றன. பாசிச சித்தாந்தத்தை முன்னெடுக்கவும், அரசியல் பதவிகள் மூலம் பணம் ஈட்டவும் இதுபோன்ற கருத்துகள்பரப்பப்படுகின்றன. இந்து மதம் ஒருபோதும் ஆபத்தைச் சந்தித்து இல்லை. நூற்றாண்டுகளுக்கு முன் முஸ்லிம் மன்னர்கள், கிறிஸ்தவர்களான ஆங்கிலேயர்கள் ஆண்டபோதுகூட இந்து மதம் ஆபத்தைச் சந்தித்தது இல்லை. இந்துத்துவா என்ற வார்த்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது,
ஆனால்,இந்துமதத்துக்கும் அந்த வார்த்தைக்கும் தொடர்பில்லை. வீர சாவர்க்கர் கடந்த 1923ம் ஆண்டு அவர் எழுதிய புத்தகத்தில்கூட, இந்து மதம் என்பது இந்துத்துவா எனக் கூறுவது தவறான கருத்து என்று தெரிவித்துள்ளார். இந்துத்துத்துவத்தை இந்து மதம் என்று தவறாகப் புரிந்துகொள்வது இந்துக்கள் மட்டுமல்ல, தேசமே செய்யும் மிகப்பெரிய தவறு.
தேசத்தை இரண்டாகப் பிரிக்கும் திட்டம் முஸ்லிம் லீக்கிற்கும், முகமது அலி ஜின்னாவுக்கு மட்டும் இருந்ததாகக் கூறகிறார்கள். ஆனால், இரு தேசம் எண்ணம் சாவர்க்கருக்கும் இருந்தது. இவ்வாறு திக்விஜய் சிங்தெரிவித்தார்.