தேனி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று (ஜன.10) தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் நிலுவையில் இருந்த மேல்முறையீட்டு மனுக்களின் நிலை குறித்து, மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார் விசாரணை செய்தார்.
முன்னதாக, தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த அவரை, கலெக்டர் முரளீதரன் வரவேற்றார். இதையடுத்து நடந்த கூட்டத்தில், மதுரை-19, திண்டுக்கல்- 11, தேனி மற்றும் விருதுநகரில் தலா 10 என, மொத்தம் 50 நிலுவையில் இருந்த மேல்முறையீட்டு மனுக்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மாநில தகவல் ஆணையர் கூறுகையில், ” கொரோனா காலகட்டத்தில் மனுதாரர்களிடம் நேரடியாக விசாரிக்க முடியவில்லை. இதனால் அந்தந்த பொதுத்தகவல் அலுவலர்களிடம் மனுக்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது ” என்றார். கலெக்டர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னிலையில் இக்கூட்டம் நடந்தது.