• Sat. May 4th, 2024

ராயர் பரம்பரை திரை விமர்சனம்

Byஜெ.துரை

Jul 7, 2023

சின்ன சாமி சினி கிரியேஷன்ஸ் சார்பில் சின்னசாமி மௌனகுரு தயாரிப்பில் ராம்நாத் T இயக்கத்தில் கிருஷ்ணா, சரண்யா, கிருத்திகா, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா நடிப்பில் திரைப்படமாக உருவாகியுள்ளது “ராயர் பரம்பரை”.

மேலும் இப்படத்தில் கஸ்தூரி, KR விஜயா, RNR மனோகர், பாவா லக்‌ஷ்மணன், ஷேஷு, பவர் ஸ்டார் ஶ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.சாதி மத பேதங்களைச் சுட்டிக்காட்டி சிரிப்பை சீரியசாக எடுத்து இயக்கியுள்ளார் இந்தப் பட இயக்குனர் ராம்நாத்.டி.

கதை நடக்கும் கிராமத்தில் ராயர் என்கிற பாத்திரத்தில் வரும் ஆனந்தராஜ் வைத்ததுதான் சட்டம் அதிலும் அவரது தங்கை காதல் திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட அவரது பெண் குழந்தையான சரண்யா நாயரை கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார்.

முகநூல் பக்கத்தில் சரண்யாவை ஃபாலோ பண்ணிய காரணத்துக்காக ஒருவன் கையை சிதைக்கிறார் அதற்கேற்றாற் போல் ஜோதிடரும்(மனோபால) அவள் திருமணம் காதல் திருமணமாகத்தான் நடைபெறும் என்று சொல்ல ராயரின் முழு நேர வேலையே மகள் பின்னாலேயே அலைந்து கொண்டிருக்க நேர்கிறது.

அதே ஊரில் இருக்கும் மொட்டை ராஜேந்திரன் கா.கா.பி.க என்ற கட்சியை நடத்திக் கொண்டு காதலர்களைப் பிரிக்கும் வேலையை கண்ணும் கருத்துமாக செய்து கொண்டிருக்கிறார். அப்படியே யாராவது காதலித்தாலும் அவர்களுக்கு தாலியைக் கொடுத்து திருமணமும் செய்து வைக்கிறார்.

அதே கட்சியில் செயலாளராக இருக்கும் (கழுகு) கிருஷ்ணாதான் படத்தின் நாயகன் காதலுக்கு எதிரியாக அவர் செயல்பட்டாலும் கிருத்திகாவும், அன்ஷுலா ஜித்தேஷ் தவானும் அவரை துரத்தித் துரத்திக் காதலித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும் அவர் சரண்யாவைதான் ஒரு கட்டத்தில் காதலித்துக் கைப்பிடிப்பார். அது எப்படி என்பதில்தான் இயக்குனர் தனது திறமையைக் காட்டி இருக்க வேண்டும் ஆனால் அவரும் காமெடி என்ற பெயரில் நம்மைச் சிரிக்க வைக்க பட ஆரம்ப காட்சி முதல் முடிவு வரை முயற்ச்சி செய்துள்ளார் அவரது போராட்டம் தோல்வி என்று தான் சொல்ல முடியும்

நாயகன் கிருஷ்ணாவின் எனர்ஜிக்கு போதுமானதாகக் கதை இல்லாவிட்டாலும் கிடைத்த கேப்பில் எல்லாம் தனது அபார சக்தியை வெளிப்படுத்தியிருக்கலாம் நடனம், ஆக்சன் என்று சொல்லி கொள்ளும் அளவுக்கு இல்லை.

சரண்யா நாயருக்கு வழக்கமான ஹீரோயின் வேடம் இடைவேளை வரை அவ்வப்போது வந்து போகிறவர் கிருஷ்ணா சொல்லும் பிளாஷ் பேக்கில் இருந்து கொஞ்சம் முக்கியத்துவம் பெறுகிறார்.

கிருஷ்ணாவைத் துரத்தித் துரத்திக் காதலிக்கும் இரண்டாவது மூன்றாவது நாயகிகள் கதா நாயகனை காதலிக்க துரத்துகிறார்கள் ஆனால் அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் ஏன் வந்தார்கள் எப்படி வந்தார்கள் முடிவில் எங்கு போனார்கள் என்ற எந்த ஒரு விபர குறிப்பும் படத்தில் இல்லை.

ஆனந்தராஜ் வழக்கம்போல் வில்லனாக அதே சமயத்தில் காமெடியனாகவும் வருகிறார் அவர் சொல்லும் “ஐ நோ, ஆல் டோன்ட் நோ… ஆல் டோன்ட் நோ, ஐ நோ…” என்கிற ஆங்கில சொல் ஆங்கிலேயர்களை கண் கலங்க செய்துள்ள பெருமை இயக்குனரை சாரும்.

படத்தில் காமெடிக்கென்று வரும் மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, பாவா லக்ஷ்மணன், சேஷு, டைகர் தங்கதுரை போன்றோர்களை அவரது போக்கில் விட்டிருந்தா கூட நகைச்சுவையைக் அள்ளி கொடுத்திருப்பார்கள். கிருஷ்ணாவின் நண்பனாக வரும் கல்லூரி வினோத் பாவம், கிருஷ்ணாவுக்காக நிறைய அடி வாங்குகிறார்.

படத்தின் இடைவேளையில் கஸ்தூரியும், கிளைமாக்ஸில் பவர் ஸ்டார் சீனிவாசனும் வருகிறார்கள். படத்தில் பவர் ஸ்டாருக்கு கொடுக்கிற ‘சீமான் செங்கல்வராயன்’ பில்டப்பும் அவர் வந்து இறங்குகிற விதமும் அதுவரை பொறுமை காத்த நமக்கு ஆறுதலான சிரிய நமட்டு சிரிப்பைத் தருகிறது.

கணேஷ் ராகவேந்திராவின் இசை சொந்த முயற்சியாக இருந்தால் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கும். பளிச்சென்று துல்லியமாகப் படம் பிடித்திருக்கும் விக்னேஷ் வாசுவின் ஒளிப்பதிவுக்கு பாராட்டுகள் மோகன் ராஜாவின் பாடல்களில் வாழ்க்கை பற்றிய தத்துவ பாடல் அருமை.

மொத்தத்தில் ராயர் பரம்பரை தயாரிப்பாளருக்கு நடிக்க உள்ள ஆசை நிறைவேறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *