• Tue. Apr 21st, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் அம்மை நோய் பரவும் அபாயம்

Byதரணி

Mar 21, 2024

சென்னை: தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இனிவரும் நாட்களில் இன்னும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.கோடை வெயில் கொளுத்தும் நிலையில் பொதுமக்களுக்கு அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம், மயக்கம், வலிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.மேலும் வெயிலின் உக்கிரம் அதிகமாக இருப்பதால் தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு தட்டம்மை, சின்னம்மை போன்ற வெப்பம் தொடர்பான நோய்கள் அதிக அளவில் தாக்குவதற்கு வாய்ப்புள்ளது. தட்டம்மை நோய்க்கு காய்ச்சல், இருமல், மூக்கில் நீர் ஒழுகுதல், கண்ணில் நீர் வடிதல் ஆகியவை அறிகுறிகளாகும். முகம் மற்றும் காதின் பின்பகுதிகளில் வேர்க்குரு போன்ற அறிகுறிகள் தோன்றி சிவப்பு புள்ளிகளாக உடல் முழுவதும் பரவி காணப்படும். கண்கள் சிவந்து வீக்கம் ஏற்படும்.சின்னம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டால் உடலில் நீர் கட்டியை போன்ற சிறிய கொப்பளங்கள் தோன்றும். பின்னர் அவை கொஞ்சம் பெரிதாகி நீர் கோர்த்து காணப்படும். கொப்பளங்களில் இருந்து நீர் வடியும். பின்னர் நீர் வறண்டு கொப்பளங்கள் உதிரும். இந்த நோய் குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும், முதியவர்களுக்கும் எளிதில் பரவும்.எனவே பொதுமக்கள் வெயில் காலத்தில் இந்த நோய்களில் இருந்து தங்களை காக்க மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.பொதுமக்கள் தேவையான அளவிற்கு தண்ணீர் குடிக்க வேண்டும், இளநீர், மோர் மற்றும் இயற்கை பழச்சாறுகளை குடிக்கலாம். திராட்சை, கிர்ணி பழம், தர்பூசணி பழங்கள் போன்ற நீர் சத்து உள்ள பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். மெல்லிய தளர்ந்த பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் ஆகியோர் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். செயற்கை குளிர்பானங்கள் மற்றும் ஐஸ் தண்ணீர் குடித்தால் ரத்தக் குழாய்கள் சுருங்கி, உடலின் வெப்பம் அதிகரிக்கும். எனவே கோடை காலத்தில் ஐஸ் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.