ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் டிசம்பர் 17 ஆம் நாளன்று ஓய்வூதியர் நாள் கொண்டாடப்படுகிறது. டிசம்பர் 17, 1982-ல், இந்திய உச்ச நீதிமன்றம், ஓய்வூதியம் குறித்து வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை நினைவுகூரும் வகையில் இந்நாள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
அரசுத் துறைகளில் பணி புரிந்து பணி ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் நிலை குறித்து பல்வேறு ஓய்வூதியர் சங்கங்கள் தாக்கல் செய்த வழக்குகள் மீது உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ஓய்வூதியர்கள் அனைவரும் ஒரே வகுப்பைச் சேர்ந்தவர்கள் எனத் தீர்ப்பளித்துள்ளது. இதில் ஓய்வு பெற்ற தேதியை அடிப்படையாக வைத்து ஓய்வூதியப் பலன்களை வழங்குவதில் பாகுபாடு செய்வது, ஓய்வூதியர்களைப் பிரிவினைச் செய்வதற்கு ஒப்பாகும் என்றும், மேலும் இவ்வாறு பாகுபாடு காட்டுவது இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 14-ஐ மீறுவதாகும் என்று 17 டிசம்பர் 1982 ஆண்டில் உச்சநீதிமன்றம், டி. எஸ். நகரா என்ற ஓய்வூதியர் தொடுத்த வழக்கில் வழங்கிய தீர்ப்பை மேற்கோள் காட்டி பல தீர்ப்புகள் வழங்கப்பட்டன.
அப்போதைய உச்ச நீதிமன்ற நீதியரசர் ஒய். வி. சந்திரசூட் தலைமையிலான அமர்வில், 17 டிசம்பர் 1982 அன்று அளித்த உரிமை சாசனத் தீர்ப்பின் ஒரு பகுதியில், ஓய்வூதியம் என்பது, உழைத்த உழைப்பிற்கு கொடுக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்ட ஊதியம் ஆகும் எனவும், அரசியல் அமைப்பு சட்டப்பிரிவுகள் 139 மற்றும் 148 (5)-இன் படி ஓய்வூதியம் என்பது ஓய்வூதியர்களுக்கு சொத்துரிமை போன்ற சட்டபூர்வமான உரிமையாகும் என்றும் தெரிவித்தது.
ஆதனால் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 17-ஆம் நாள் ஓய்வூதியர் நாள், ஓய்வூதியர்களால் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.
அரசு பணி என்றால் நிரந்திர வருமானம்…இது எதன் அடிப்படையில் என்று கேட்டால் சட்டத்தில் ஓய்வூதியம் என்பது ஒவ்வொரு அரசு ஊழியர்ளின் உரிமை என்று நிலைநாட்டப்பட்டுள்ளது.எப்போதெல்லாம் அரசு பணியில் இருப்பவர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி தரப்படுகிறதோ அதேபோல் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுகிறது.
ஆகவே, இந்த ஓய்வூதியம் என்பது ஒரு அரசு ஊழியர் பணியில் இருந்தபோது அவர் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யும் பணமே தவிரே அரசு வழங்கும் கருணை தொகை அல்ல…








