தேனி மாவட்டத்தில் தி.மு.க. அரசை கண்டித்து மாவட்ட அ.தி.மு.க., சார்பில் தேனி பங்களா மேட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
முன்னாள் முதல்வரும், கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், மகளிரணியைச் சேர்ந்த நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் திரண்டனர். இதனால் தேனி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் வாகன நெரிசலை சீரமைத்தனர்.
தேர்தல் நேரத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைப்பது, கல்வி கடன் ரத்து, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாத தி.மு.க., அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர்.
இந்த கண்டன ஆர்பாட்டத்தில் ரவீந்திரநாத் எம்.பி.,மாவட்ட செயலாளர் சையது சான், முன்னாள் எம்.பி., பார்த்தீபன், முன்னாள் எம்.எல்.ஏ., ஜக்கையன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.