மதுரை மாவட்டத்தில் தீயாய் வேலை செய்யும் தீயைணப்பு வாகனங்களை, வெளிநாடுகளில் இருந்து தரமானதாக இறக்குமதி செய்யுங்கள் என அரசுக்கு தீயணைப்பு வீரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் 14 தீயணைப்பு நிலையங்கள், 25 வாகனங்கள் உள்ளன. அனைத்தும் 10 முதல் 15 ஆண்டுகள் ‘வயது’ உடையவை. ஒரு வாகனத்திற்கு அதிகபட்ச ஆயுள் 15 ஆண்டுகள் என்றாலும் அதையும் தாண்டி தீயணைப்பு வண்டிகள் ‘தீ’யாக வேலை செய்கின்றன. அதேநேரம் உதிரிபாகங்கள் பல கழன்றும், துருப்பிடித்தும் உள்ளன. இதனால் அவ்வப்போது ‘டிங்கிரிங்’ வேலை செய்து சமாளிக்கின்றனர்.
இதுகுறித்து தீயணைப்பு வீரர்கள் கூறியதாவது:
போலீஸ் துறைக்கு முக்கியத்துவம் தரும் அரசு, தீயணைப்பு துறையை கண்டுகொள்வதில்லை. காலத்திற்கேற்ப நவீன வாகனங்கள் தந்தால்தான் சம்பவ இடத்திற்கு உடனடியாக செல்ல முடியும். மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களில் உள்ள தீயணைப்பு வாகனங்கள் அதிநவீன வசதிகள் கொண்டவை. மத்திய அரசு பெல்ஜியம், பின்லாந்து நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து தந்துள்ளது.
தமிழக அரசும் அதேபோல் இறக்குமதி செய்து வழங்கினால் தீ விபத்தின் பாதிப்பை குறைக்கலாம். உயிரிழப்பை தடுக்கலாம். பராமரிப்பு செலவும் குறைவு. குறுகிய சந்துகளில் தீப்பிடித்தால் டூவீலரில் சென்று அணைக்கும் திட்டம் ஐ.பி.எஸ்., அதிகாரி நட்ராஜ் இயக்குனராக இருந்த போது மதுரையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த டூவீலர்கள் உதிரிபாகங்களின்றி, ஆள் பற்றாக்குறையால் பயனின்றி உள்ளன என்றனர்.