• Sun. Mar 16th, 2025

மது வழக்குகளிலிருந்து மனந்திருந்திய 13 நபர்களுக்கு மறுவாழ்வு

ByT.Vasanthkumar

Feb 17, 2025

பெரம்பலூர் மாவட்டத்தில் மது குற்ற வழக்குகளிலிருந்து விடுபட்டு மனந்திருந்திய 13 நபர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் மறுவாழ்வு நிதியின் கீழ் தலா ரூ.50,000 வீதம் ரூ.6.50லட்சம் மதிப்பிலான கறவை மாடுகளை வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்டத்தில், மது குற்ற வழக்குகளிலிருந்து விடுபட்டு மனம் திருந்தியவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரோ ஆகியோர் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையின் மூலமாக, மறுவாழ்வு நிதியுதவியின் கீழ் கறவை மாடுகளை இன்று (17.02.2025) ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வழங்கினார்கள்.
மதுகுற்ற வழக்குகளில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறையின் மூலமாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் மனம் திருந்தி சமூகத்தில் நன்மதிப்புடன் வாழ்வதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் உரிய நடவடிக்கைகள் அரசின் மூலம் எடுக்கப்பட்டு வருகின்றது.
அதன்படி, மது குற்ற வழக்குகளில் ஈடுபட்டு மனம் திருந்தி வாழ்பவர்களுக்கு அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் விதமாகவும், மீண்டும் மது குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தவிர்த்தடும் பொருட்டாகவும் நிரந்தர வருவாய் ஈட்டிடும் பொருட்டு மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையின் மூலமாக ஒவ்வொருவருக்கும் தலா ரூ.50,000 மறுவாழ்வு நிதி அளிக்கப்படுகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில், 2024-2025 ஆம் ஆண்டிற்கான மறுவாழ்வு நிதியாக ரூ.7,50,000 ஒதுக்கீடு செய்யப்பட்டதில், மது குற்ற செயல்களிலிருந்து விடுபட்டு மனம் திருந்திய 15 நபர்களுக்கு தலா ரூ.50,000/- மதிப்பீட்டில் காப்பீட்டுடன் கூடிய கறவை மாடுகள் வாங்கிட கால்நடை பராமரிப்புத்துறைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் ஆணையிடப்பட்டது.
அதனடிப்படையில் மது குற்ற வழக்குகளில் ஈடுபட்டு மனம் திருந்திய 13 நபர்களுக்கு தலா ரூ.50,000 வீதம் மொத்தம் ரூ.6.50லட்சம் மதிப்பிலான கறவைமாடுகளையும், கன்றுக்குட்டிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் வழங்கினர். மேலும், இதுபோன்ற குற்றச்செயல்களில் இனி ஒருபோதும் ஈடுபடக்கூடாது என்றும், கறவை மாடுகள் மற்றும் கன்றுக்குட்டிகளைக் பயன்படுத்தி பால் உற்பத்தி செய்து, தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தி சமூகத்தில் நன்மதிப்புடன் வாழ்ந்திட வேண்டும் என அறிவுறுத்தினார்கள். மேலும், இன்று கறவை மாடுகள் பெற்றுக்கொண்டவர்களை அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்த்திடவும் மாவட்ட ஆட்சித்தலைவைர் அவர்கள் அரசுத்துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில், மாவட்ட போதைப்பொருள் தடுப்புப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மு.பாலமுருகன், கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.பகவத்சிங், துணை இயக்குநர் சங்கர நாராயணன், கலால் உதவி ஆணையர் (பொறுப்பு) சிவா, போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர்கள், கால்நடைத்துறை உதவி மருத்துவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.