• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

கரட்டுப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..,

ByKalamegam Viswanathan

Jul 22, 2026

தமிழக வெற்றி கழகம் சார்பில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு கொடுத்த தேர்தல் வாக்குறுதியில் தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளின் பயிர் கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதல்வர் விஜய் அப்போது அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் முதல்வர் விஜய் பொறுப்பேற்று இரண்டு மாதங்களுக்கு மேலான நிலையில் தற்போது வரை பயிர் கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என கூறப்படுகிறது. குறிப்பாக பெரிய விவசாயிகளுக்கு 50% சிறு குறு விவசாயிகளுக்கு 100% பயிர் கடன்கள் தள்ளுபடியும் செய்யப்படும் என தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது சிறு குறு விவசாயிகளுக்கு 70 சதவீதம் மட்டுமே கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இதன் காரணமாக மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு விவசாயிகள் சார்பில் பயிர் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்யாத தவெக அரசை கண்டித்து விவசாயிகள் ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கரட்டுப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு மேலநாச்சிகுளம் விவசாயி கார்த்திக் பாலு தலைமையில் விவசாயிகள் ஏராளமானோர்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது பயிர் கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யாத தவெக அரசை கண்டிப்பதாகவும் உடனடியாக பயிர் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். முல்லை பெரியார் பாசன கால்வாயில் இரண்டாம் போகத்திற்கான தண்ணீர் வரத்து இல்லாத நிலையில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆகையால் ஏற்கனவே வங்கிகளில் பெற்ற கடன்களை அடைக்க முடியாத நிலையில் விவசாயிகளின் வாழ்வாதாரம் மோசமான நிலையில் இருப்பதால் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி பயிர் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

இந்த அறிவிப்பை தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல்வர் விஜய் அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் கூறினார்கள். மேலும் தொடர்ந்து விவசாயிகளை இந்த அரசு வஞ்சிக்கும் பட்சத்தில் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் தமிழக முழுவதும் கடும் தோல்வியை சந்திக்கும் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்தனர். பயிர் கடன்களை தள்ளுபடி செய்யாவிட்டால் விவசாயிகள் சார்பில் அடுத்தடுத்து போராட்டங்களை அறிவிக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும் எனவும் தமிழக அரசை எச்சரித்தனர்.