தமிழகம் முழுவதும் ரேஷன்கடை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டாக்பியா சார்பில் ரேஷன் கடை இருப்பு குறைவிற்கு அபராதத்தை இரு மடங்காக உயர்த்துவது, இயந்திரப் பொழுதுக்கு விற்பனையாளர்களை பொறுப்பாக்குவது இவைகளுக்கு கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவு செய்யும் வகையில் இன்று ஒரு நாள் ரேஷன் பணியாளர்கள் அனைவரும் விடுப்பு எடுத்துள்ளனர். இந்த விடுப்பு நாளில் நாள் முழுவதும் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் இன்று ரேஷன் கடைகள் இயங்குமா என்று பொதுமக்கள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது.
இது தொடர்பாக கோவை மாவட்ட தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பால்ராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது..,
தமிழகத்தில் உள்ள, 4,451 தொடக்க மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக, 23 ஆயிரத்து 503 முழு நேர ரேஷன் கடைகளும், 9,565 பகுதி நேர ரேஷன் கடைகளும் செயல்படுகின்றன. இக்கடைகளில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. ரேஷன் கடை ஊழியர்கள் மிக குறைவான சம்பளத்தில் பணியாற்றி வருகின்றனர். ரேஷன் கடைகளில் இறக்கப்படும் ஒவ்வொரு மூட்டைகளிலும், ஒன்றிலிருந்து ஐந்து கிலோ வரை எடை குறைவாக உள்ளன. மூட்டைகளை இறக்கும் போது விற்பனையாளர்கள் எடை அளவை சரிபார்க்க அனுமதிப்பதில்லை. அதனால் ஒரு அதிகாரி உடனிருந்து எடை அளவை அவசியம் சரி பார்க்க வேண்டும். புதிதாக சேரும் பணியாளர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் காலமுறை சம்பளம் வழங்க வேண்டும். அதிகாரிகளால் அச்சுறுத்தல்கள், நிர்பந்தங்கள், அபராதங்களால், விற்பனையாளர்கள் ஒவ்வொரு நாளும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்த இன்னல்கள் அனைத்தும் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல தமிழகம் முழுவதும் மூன்றாம் தேதி (இன்று) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வது. கோரிக்கைகள் ஏற்று பரிசீலனை செய்யவில்லை என்றால், வருகிற எட்டாம் தேதியிலிருந்து, தொடர் வேலை நிறுத்தம் செய்வது. இவ்வாறு கோரிக்கை மனுவில் கூறியுள்ளார்.













; ?>)
; ?>)
; ?>)