எனது தம்பி மற்றும் அவருக்குத் தெரிந்தவர்கள் தொடர்புடைய இடங்களில் மட்டுமே வருமான வரித்துறை சோதனை நடக்கிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் இன்று அதிகாலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, அவரது சகோதரர் வீடு மற்றும் அவர்களுக்குச் சொந்தமான தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமானவரித்துறையின் சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. சோதனை நடைபெறும் இடத்தில் அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில் வருமான வரித்துறை சோதனை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், ” சென்னை மற்றும் கரூரில் உள்ள எனது வீடுகளில் சோதனை நடக்கவில்லை. எனது தம்பி மற்றும் அவருக்குத் தெரிந்தவர்கள் தொடர்புடைய இடங்களில் மட்டுமே வருமானவரித்துறை சோதனை நடக்கிறது”என்றார்.