ராகுல்காந்தி நடைப்பயணத்தின் போது யாஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான கேஜிஎப் 2 திரைப்படத்தின் பாடல்கள், இசையை தனது வீடியோ ப்ரோமேஷன்களுக்கு அனுமதி பெறாமல் பயன்படுத்தியுள்ளார் என புகார் எழுந்துள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த எம்ஆர்டி மியூசிக் என்ற நிறுவனம் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, ஜெய்ராம் ரமேஷ், சுப்ரியா ஆகியோர் மீது காப்புரிமை மீறல் புகாரில் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. பெரும் தொகையை முதலீடு செய்து கேஜிஎப் 2 பாடல் காப்புரிமையை பெற்றுள்ளதாகவும், அதை உரிய அனுமதி பெறாமல் பயன்படுத்துவது முற்றிலும் ஏற்க முடியாத ஒன்று என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
காப்புரிமை பாதுகாப்பை உறுதி செய்வதை விட்டுவிட்டு,காங்கிரஸ் கட்சி இவ்வாறு பாடலை பயன்படுத்தி நாட்டின் குடிமக்களுக்கு தவறான வழிகாட்டுதலை வழங்குகிறது. எனவே, இந்த அத்துமீறலை நாங்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். இது எங்கள் உரிமையை பெறும் நடவடிக்கையே தவிர அரசியல் கட்சியின் பிம்பத்தை சேதம் செய்யும் உள்நோக்கம் ஏதும் இல்லை என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.