• Mon. Apr 29th, 2024

நல்லாசிரியர் விருது பெறுவதற்கான தகுதிகள் குறித்த பட்டியல் வெளியீடு..!

Byவிஷா

Jul 17, 2023

தமிழகத்தில் அரசு சார்பாக வழங்கப்படும் நல்லாசிரியர் விருதுக்கான தகுதிகள் குறித்த விதிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 386 ஆசிரியர்களுக்கு நல்லா ஆசிரியர் விருது வழங்கப்படும். மாவட்ட அளவில் முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் ஆறு உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு விருப்பமுள்ள மற்றும் தகுதி உள்ள ஆசிரியர்களிடம் விண்ணப்பங்களை பெற வேண்டும் எனவும், தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் பெறாமல் விட்டுவிடக்கூடாது எனவும், பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதிக்குள் பரிந்துரை பட்டியல் தயார் செய்ய வேண்டும். விருதுக்கு தகுதியான ஆசிரியர்கள் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் பணியில் இருக்க வேண்டும்.
மாநில பாடத்திட்ட ஆசிரியர்கள் மட்டுமே விருது பெறுவதற்கு தகுதி உடையவர்கள். வகுப்பறை கற்பித்தல் பணி இல்லாத நிர்வாக பணி ஆசிரியர்களுக்கு இந்த விருது கிடையாது. செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் ஓய்வு பெறும் ஆசிரியர்களை பரிந்துரைக்க கூடாது. ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டு இருந்தால் அவர்களுக்கு விருது கிடையாது. அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய ஆசிரியர்களின் பெயர்களை கண்டிப்பாக பரிந்துரை செய்யக்கூடாது. கல்வியை வணிகரீதியாக கருதி டியூஷன் எடுக்கும் ஆசிரியர்கள் மற்றும் நடத்தை விதிகளுக்கு முரணாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கு இந்த விருது கிடையாது. மாநில அரசு பரிந்துரைத்த தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுக்கும் இந்த விருது கிடையாது என விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *