தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமியை அவரது ஆண் நண்பர் கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் வீதியில் சிறுமி ஒருவர் நடந்து சென்றுக்கொண்டிருந்த போது பின்னால் வந்த இளைஞர் திடிரென சிறுமியை கொடூரமாக தாக்கும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தது டெல்லியின் ஷாபாத் பகுதியில் உள்ள ஜே.ஜே.காலனியை சேர்ந்த 16 வயது சிறுமி என்பது தெரியவந்தது. சிறுமிக்கும் சகில் என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்துள்ளது. கருத்துவேறுபாடு காரணமாக சிறுமிக்கும் சகில் என்பவருக்கும் இடையே சனிக்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுமி சகிலிடம் பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று சிறுமி தனது நண்பர் ஒருவரின் குழந்தையின் பிறந்தநாள் பார்டிக்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது பின் தொடர்ந்து வந்த சகில் சிறுமியை கத்தியால் குத்தி கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் கற்களை கொண்டு தாக்கி படுகொலை செய்துள்ளார். இரத்த வெள்ளத்தில் சிறுமி துடிதுடித்து இறந்து போனது தெரியவந்துள்ளது.
பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாக உள்ள சகிலை போலீஸார் தேடி வந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.