மதுரையின் அட்சயபாத்திரம் அமைப்பு சார்பில் சாலையோர வாசிகளுக்கும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உணவு வழங்கும் திட்டம் தொடங்கப் பெற்று 250 ஆவது நாளை முன்னிட்டு, மதுரை ரயில் நிலையம் பகுதியில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாலையோர வாசிகளுக்கு உணவு வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், ‘கொரோனா ஊரடங்கு காலமான இன்று மதுரையில் சாலையோர வாசிகளுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது நோய் தொற்று அதி தீவிரமாக பரவி வருகிறது. தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அவ்வாறு, தொற்று பாதிக்கப்படுத்து வீட்டில் தனிமைப்படுத்தி கொண்ட மதுரையில் ஜோதிகா என்பவர், ஊரடங்கு காலத்தில் கிடைக்க வேண்டிய பொருட்கள், பொங்கல் நிவாரணம் எதுவும் கிடைக்காத காரணத்தால் மனமுடைந்து குடும்பமே விஷம் அருந்தி தற்கொலை முயற்சி செய்ததில் தாயும் – மகனும் உயிரிழந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.
கடந்த காலங்களில், நோய்த்தொற்று நேரத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேவையான பொருட்கள் காய்கறிகள்.உணவு மருந்து மாத்திரை உள்ளிட்ட சேவைகளை செய்து வந்தோம்.மேலும், ஊரடங்கு காலத்தில் 2500 ரூபாய் ரொக்கப்பணம் வழங்கினோம். ஆனால் தற்போது நடைமுறையில், உள்ள ஊரடங்கு காலத்தில், கூலி வேலைக்கு செல்பவர்கள் உணவு கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
மேலும், முககவசம் அணிய வலியுறுத்தி தானே களத்தில் இறங்கி முக கவசம் அணிந்து விடும் தமிழக முதல்வர், இதுபோன்று தொற்று பாதிக்கப்பட்டு வீடுகளிலே தனிமைப்படுத்தப்பட்ட வர்களுக்கு அடிப்படை தேவையான உதவிகளை வழங்க வேண்டும்’ என்றார்.