சிறந்து விளங்கும் விவசாயிகளை அரசு ஊக்குவித்து பாராட்டி பரிசளிக்கும் திட்டம் தமிழக அரசு அறிவிப்பு
இயற்கை வேளாண்மை, விளைபொருள் ஏற்றுமதி, வேளாண்மையில் புதிய உள்ளூர் கண்டுபிடிப்பு ஆகிய மூன்று இனங்களில் சிறந்து விளங்கும் விவசாயிகளை அரசு ஊக்குவித்து பாராட்டி பரிசளிக்கும் திட்டத்தை 2021 – 2022-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தி அதற்கு நிதியும் ஒப்பளிக்கப்பட்டது. நடப்பாண்டிலும் இத்திட்டத்தை செயல்படுத்தி, மேற்கண்ட 3 இனங்களில் சிறந்து விளங்கும் விவசாயிகளை தொடர்ந்து ஊக்குவித்து, பாராட்டி பரிசளிக்கும் என்றும் கடந்த வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
மேற்கண்ட 3 இனங்களில் தகுதியான விவசாயிகளை தேர்வு செய்வதற்காக மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையிலும், மாநில அளவில் வேளாண்மைத்துறை இயக்குநர், தோட்டக்கலைத்துறை இயக்குநர், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பாக, தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி தலைமையிலும், தேர்வுக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயிகள், உழவன் செயலி மூலமாக தங்கள் பெயர்களை பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை முறையாகப் பூர்த்தி செய்து சமர்ப்பித்திட வேண்டும். குத்தகை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம்.