
தனது வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்து ஒழுக்க சீலராக வாழ்ந்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என வைகோ புகழாரம் சூட்டியுள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் உள்ள அவரின் சிலைக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் அவருடன் அக்கட்சியின் தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ பங்கேற்றார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த வைகோ, நான் சிறைப்பட்டிருந்த ஆண்டுகள் தவிர கடந்த 46 ஆண்டுகளாக தேவருக்கு தொடர்ந்து மாலை அணிவித்து மரியாதை செய்து வருகிறேன். நேதாஜி சுபாஷ் சந்திர போசை தலைவராக ஏற்றுக் கொண்டவர். அதுமட்டுமன்றி பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்து ஒழுக்க சீலராக தன் வாழ் நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியவர். அவரது ஜெயந்தி நாளை அனைத்து சாதியினரும் கொண்டாட வேண்டும் என்பதே எனது வேண்டுகோள் என்றார்.
