

கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தலைவரான போப் பிரான்சிஸ்க்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ளதாக வாடிகன் தெரிவித்துள்ளது.
கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தலைவரான போப் பிரான்சிஸ் (88) சுவாசப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு பிப். 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சோதனை செய்யப்பட்டதில், சுவாசப்பாதையில் தொற்று ஏற்பட்டு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், போப் பிரான்சிஸ்க்கு பிப்ரவரி 22-ம் தேதி ஆஸ்துமா பாதிப்பு அதிகரித்தது. அத்துடன் ரத்தத்தில் பிளேட்லெட் எண்ணிக்கை குறைந்ததால் அவருக்கு ரத்த மாற்று சிகிச்சையும் நடைபெற்றது. இதையடுத்து அவர் மருத்துவமனைக் கண்காணிப்பில் உள்ளார்.
இந்த நிலையில், போப் உடல்நிலை தொடர்பாக வாடிகன் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “போப் ஆண்டவருக்கு நேற்று (பிப்ரவரி 28) மதியம் மூச்சுக்குழாய் பிடிப்பு என்ற ஒரு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாந்தி ஏற்பட்டது. மேலும், அவரது சுவாசநிலை திடீரென மோசமடைந்தது. அவருக்கு உடனடியாக மூச்சுக்குழாய் ஆஸ்பிரேஷன் செய்யப்பட்டது.
மேலும், அவருக்கு இயந்திர காற்றோட்டம் வழங்கப்பட்டது, இது அவரது ஆக்ஸிஜன் அளவை மேம்படுத்தியது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கவலையடைந்துள்ள உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்கள், போப் உடல்நலம் பெற்று மீண்டு வர பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

