சட்டமன்ற அலுவலகத்தில், முதல்வரின் இருக்கையின் பின்புறம் இருந்த கடற்கரையின் படம் அகற்றப்பட்டு அருணாசலேஸ்வரர் கோயில் படம் வைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் சட்டசபை அலுவலகத்தில் அப்பா பைத்தியசாமிகள், காமராஜர் உள்ளிட்டோரின் படங்கள் பெரிய அளவில் இடம்பெற்றிருக்கும். மேலும், அலுவலக சுவரில் ஓவியங்களும் பொருத்தப்பட்டிருக்கும்.அந்த வகையில், முதல்வரின் இருக்கைக்கு நேர் பின்னால் புதுச்சேரி கடற்கரையின் பழைய படம் துறைமுகத்துடன் இருப்பது போன்று வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அந்த படம் தற்போது அகற்றப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் பின்னணியில் கார்த்திகை தீபம் ஏற்றும் மலை தெரியும் விதமாக உள்ள படம் வைக்கப்பட்டுள்ளது. ஆன்மீகத்தில் மிகவும் நாட்டமுடைய ரங்கசாமியின் விருப்பத்துக்கு ஏற்ப இந்த படம் வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் ரங்கசாமி ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருநாளன்று திருவண்ணாமலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அன்றைய தினம் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் கோவிலுக்கு செல்லாமல் நகருக்குள் எங்காவது ஓரிடத்தில் நின்று கார்த்திகை தீபத்தை பார்த்துவிட்டு வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.