தேனி மாவட்டத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை கண்டறிந்து, அவற்றை உரிய பட்டியல் இனத்தவருக்கு வழங்க வலியுறுத்தி, தலித் நில உரிமை இயக்கத்தின் சார்பாக தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரனிடம் மனு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு முழுவதிலும் இருந்த தரிசு நிலங்களை கண்டறிந்து அவற்றை பட்டியலின மக்களுக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டது. சுமார் 12 லட்சத்து 66 ஆயிரம் ஏக்கர் நிலங்களை மாதாரி, சாம்பான், குடும்பன் என பல்வேறு பட்டியலின சமூகத்திற்கு அரசு வழங்கியது. அந்த நிலம் பஞ்சமி நிலம் என அழைக்கப்படுகிறது.
இந்த நிலங்களை பட்டியலினத்தவர் தவிர வேறு சமூகத்தினர் விலைக்கு வாங்கவோ, பயன்படுத்தக் கூடாது என அரசாங்கம் உத்தரவிட்டிருந்த நிலையில், தமிழக அரசின் வருவாய்த்துறை தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ஆணையும் பிறப்பிக்கப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை கண்டறிந்து உரியவர்களிடம் ஒப்படைக்க அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே தேனி மாவட்ட தலித் நில உரிமை இயக்கத்தின் 20 ஆண்டு கால பஞ்சமி நில மீட்புப் போராட்டத்தை கருத்தில் கொண்டு, மாவட்டத்தில் உள்ள சுமார் 3500 ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்டு, உரிய பட்டியல் இனத்தவருக்கு வழங்கிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தது.
இந்நிகழ்வில் நில உரிமை இயக்கத்தின் தலைவர் முருகேசன், ஜெயச்சந்திரன், சமூக ஆர்வலர் மற்றும் கிராம முன்னேற்ற இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜாமணி ,மாவட்ட செயலாளர் செல்வி,ரமா ஆகியோர் கலந்து கொண்டனர்.