• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சதுரகிரிமலையில் நாளை முதல் 4 நாட்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி

ByKalamegam Viswanathan

May 31, 2023

வைகாசி விசாகம் மற்றும் வைகாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு நாளை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு, வைகாசி மாத வளர்பிறை பிரதோஷம், வைகாசி விசாகம் மற்றும் வைகாசி மாத பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். சதுரகிரிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு, ஒவ்வொரு பிரதோஷம் நாளிலிருந்து தொடர்ச்சியாக 4 நாட்கள் என, ஒரு மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு வனத்துறை அனுமதி வழங்கி வருகிறது.

நாளை 1ம் தேதி (வியாழன் கிழமை) வைகாசி மாத வளர்பிறை பிரதோஷம், 2ம் தேதி (வெள்ளி கிழமை) வைகாசி விசாகம், 3ம் தேதி வைகாசி மாத பௌர்ணமி மற்றும் அதற்கு மறுநாள் 4ம் தேதி (ஞாயிறு கிழமை) ஆகிய 4 நாட்களும் பக்தர்கள் மலைக் கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம், வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளனர். அனுமதி வழங்கப்பட்டுள்ள நாட்களில் தினமும் காலை 7 மணியில் இருந்து, நன்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை அடிவாரப் பகுதியிலிருந்து, மலைக் கோவிலுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. வரும் வெள்ளி கிழமை வைகாசி விசாகம், சனி கிழமை வைகாசி பௌர்ணமி நாட்களிலும், மறுநாள் ஞாயிறு கிழமை விடுமுறை நாளிலும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக சதுரகிரிமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.