• Wed. Apr 24th, 2024

பத்துதல- திரைவிமர்சனம்

Byதன பாலன்

Mar 31, 2023

வேற்று மொழியில் வெற்றிபெற்ற படங்களை தமிழில் தயாரிப்பது அதுவும் வியாபாரம் உள்ள நடிகர்களை நடிக்க வைத்து இயக்குவது கத்திமேல் நடப்பது போன்றது. அதேபோன்று அரசியல் புரிதலும், தமிழக அரசியல் அடிப்படை ஞானம் இன்றி தமிழ் திரைப்படங்கள் தொடர்ந்து தயாரிக்கப்பட்டு வருகின்றது இந்த இரண்டு விஷயங்களும்” பத்துதல” படத்திற்கு பொருந்தும்.

தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும், யார் முதல்வராக வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அளவுக்கான செல்வாக்கு படைத்தவர் மணல் மாஃபியா தாதாவான ஏஜிஆர் (சிலம்பரசன்). திடீரென ஒருநாள் தமிழகத்தின் முதல்வர் கடத்தப்பட்டு காணாமல் போகிறார்.

அவரைக் கடத்தியது யார் என்ற விசாரணையில் சிபிஐ தீவிரம் காட்ட, ஏஜிஆர் மீது சந்தேகம் திரும்புகிறது. அதற்காக அன்டர் கவர் போலீஸ் அதிகாரி ஒருவர், ஏஜிஆர் கேங்கில் இணைந்து உளவு பார்க்கிறார். இறுதியில் முதல்வரை கடத்தியது யார்? அவரை கடத்த என்ன காரணம்? சிலம்பரசன பின்னணி என்ன? – இதுதான் பத்துதல படத்தின் ஒருவரி திரைக்கதை.

கன்னடத்தில் வெளியான ‘மஃப்டி’ படத்தின் திரைக்கதையில் பல்வேறு மாற்றங்களை தமிழ் படத்திற்காக செய்து இயக்கியிருக்கிறார் இயக்குநர் ஒபிலி.என்.கிருஷ்ணா. அன்டர் கவர் ஆஃபீசரின் வழியாக கேங்க்ஸ்டர் ஒருவரின் வாழ்க்கையை ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்து, கதை சொல்கிற பாணிசுவாரஸ்யம் மிக்கது.

ஒரு மாநிலத்தின் முதல்வர் கடத்தப்படுவது, அதைத் தொடர்ந்து அவரைத் தேடும் பணிகளை தீவிரப்படுத்துவது , ஏஜிஆர் குறித்த பில்டப்புகள் என படத்தின் முதல் பாதி பார்வையாளனை யோசிக்கவிடாமல் கடந்துபோக செய்தாலும், சிலம்பரசன் நடித்த படம் என விளம்பரம் செய்தார்களே ஒரு மணிநேரம் ஆகியும் அவரை காணோமே என கண்கள் அலைபாயும் நேரத்தில்இடைவேளைக்கு சற்றுமுன் சிலம்பரசன்ன் ‘மாஸ்’ இன்ட்ரோ, அவரது ரசிகர்களுக்கான விருந்தாக அமைகிறது

குறிப்பாக சிலம்பரசனின் ‘கெத்தான’ நடைக்கும் கம்பீரத்துக்கும் ஏற்றார்போல எழுதப்பட்டுள்ள

“மண்ண ஆள்றவனுக்கு தாம்ல எல்ல.. மண்ண அள்ற எனக்கு அது இல்ல”,

‘‘நல்லவனா இருக்க கெட்ட முகம் ஒண்ணு தேவப்படுது”,

“எலிய பயங்காட்ட சிங்கம் ஏன் ஊர்லவம் போகணும்”

போன்ற வசனங்கள் திரையரங்கத்தை அதிர வைக்கிறது.படத்தின் இறுதிக்கட்ட சண்டைக்காட்சியில் ஃபாருக் பாஷா ஒளிப்பதிவும், ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசையும் இணைந்து காட்சிகளில் இருந்து கண்களை அகல விடாமல் கட்டிப்போடுகின்றன.

படத்தின் தடுமாற்றம் இடைவேளைக்கு பின்பு இருந்து
தொடங்குகிறது. தமிழ்நாடு முதல்வரை தீர்மானிக்கும் அளவுக்கு ஏஜிஆர் உருவானது எப்படி என்பதற்கான வலிமையான காரணங்கள் இல்லை, கவுதம் கார்த்திக் – ப்ரியா பவானி சங்கர் பிரிவதற்கு சொல்லப்படும் காரணம் கத்துக்குட்டிதனமானதாகி திரைக்கதையை பலவீனமாக்கிவிடுகிறது
கேங்க்ஸ்டர் ஒருவர் மக்களுக்கு நல்லவராகவும், காவல் துறைக்கு குற்றவாளியாகவும் இருக்கும் தமிழ் சினிமாவின் அரதப்பழசான பழைய ஃபார்மெட், மணல் மாஃபியாவை நியாயப்படுத்த சிலம்பரசன் சொல்லும் காரணம், அவருக்கும் தங்கைக்குமான உணர்வுபூர்வமான காட்சிகள் சரியாக பொருந்திபோகாதது உள்ளிட்டவை படத்தை தடுமாற வைக்கிறது.

சால்ட் அண்ட் பெப்பர் தாடியும், கறுப்பு வேட்டி – சட்டையுமாக கதாபாத்திரத்திற்கான கெட்டப்பில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் சிலம்பரசன். வாயில் கத்தியுடன், வேட்டியை மடித்துக் கட்டும் இறுதி சண்டைக்காட்சி, அவரது ரசிகர்களுக்கான பத்தாயிரம் வாலா சரவவடிரகம்

படத்தில்தேவைக்கு அதிகமாக பேசாத, முகபாவனைகளால் உணர்ச்சிகளை கடத்தும் கதாபாத்திரத்தில் கவுதம் கார்த்திக்கின் நடிப்பு தனித்து தெரிகிறது. அவரது திரைபயணத்தில் அடுத்த கட்டத்திற்கான படம் பத்துதல

ப்ரியா பவானி ஷங்கர், கௌதம் வாசுதேவ் மேனன் எல்லைக்குள் நடித்துள்ளனர். இவர்களைத் தவிர்த்து, டீஜே, அனு சிதாரா, கலையரசன், சந்தோஷ் பிரதாப், ரெடின் கிங்க்ஸ்லி, மனுஷ்யபுத்திரன், சென்ராயன், மது குருசாமி தேவைக்கேற்ப பயன்படுத்தப்பட்டுள்ளனர்

மொத்தத்தில் ‘பத்து தல’ சிலம்பரசன் ரசிகர்களுக்கான முழுமையான படமாகவும் இல்லாமல்,வெகுஜன ரசிகர்களுக்கான படமாகவும் இல்லாமல், அரசியலை முழுமையாக சொல்லமுடியாமல் தொண்டையில் சிக்கிய உணவாக
நடுவில் சிக்கியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *