ரயில்களில், 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் குறைக்கப்பட்டதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டு உள்ளது.
இதுபற்றி தென்னக ரயில்வே ஆலோசனை குழு முன்னாள் உறுப்பினர் கே.என்.பாஷா, தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்து இருப்பதாவது:-
கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு வழியாக மும்பைக்கு தினமும் இயக்கப்படும் லோக் மானியதிலக் எக்ஸ்பிரஸ் ரயிலில், 2-ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட 12 பெட்டிகளுடனும், 3-ம் வகுப்பு குளிர்சாதன வசதி கொண்ட 3 பெட்டிகளுடனும் இயக்கப்பட்டது. தற்போது 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி கடந்த 12-ந்தேதியில் இருந்து 3 பெட்டிகளாக குறைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் 3-ம் வகுப்பு கொண்ட குளிர்சாதன படுக்கை வசதி 9 பெட்டிகள் என அதிகரித்தும் இயக்கப்படுகிறது. இதில், 2-ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டியில் பயணம் செய்ய ரூ.590-ம், 3-ம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்ய ரூ.1,580-ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் காரணமாக ஏழை, எளிய, நடுத்தர மக்கள், 2-ம் வகுப்பு படுக்கை வசதியை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தென்னக ரயில்வே நிர்வாகம் முன்பு போல, 2-ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டியை அதிகப்படுத்தி இயக்க பரிசீலனை செய்ய வேண்டும். மேலும் ஆலப்புழாவில் இருந்து டாட் தன்பாத் வரை இயக்கப்படும் ரயிலிலும், ரயில் பெட்டி எண்ணிக்கை குறைக்கப்பட்டு உள்ளது. அதையும் மீண்டும் அதிகரிக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், ஈரோடு ரயில் நிலையத்தில் 4-வது நடைமேடை பகுதியில் முழுமையாக மேற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு ரயில் நிலையத்தில் 4 சக்கர வாகனங்களை நிறுத்த ஒவ்வொரு மணி நேரத்துக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டண வசூலை தடுத்து, ஒரு நாளைக்கு குறைந்த கட்டணத்தை நிர்ணயித்து வசூலிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் தெரிவித்து இருந்தார்.