• Fri. Aug 28th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பெரம்பலூர் தொகுதியில் பாரிவேந்தர் போட்டி

Byவிஷா

Mar 12, 2024

வருகிற மக்களவைத் தேர்தலில், பெரம்பலூர் தொகுதியில் தாமரைச் சின்னத்தில் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் 3-வது முறையாக போட்டியிடுகிறார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளும் தனது கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீட்டினை இறுதி செய்து வருகின்றன. முதன்முதலாக திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப்பங்கீட்டினை இறுதி செய்துவிட்டது. தொடர்ந்து பாஜகவும் தொகுதிப்பங்கீட்டை இறுதிசெய்ய தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில், சென்னை பாஜக அலுவலகத்தில் அதன் கூட்டணிக் கட்சி தலைவர்களுடன் மக்களவைத் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பாஜகவின் கூட்டணிக் கட்சிகளான புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாரிவேந்தர்..,
“ஐஜேகே கட்சிக்கு 2 தொகுதிகள் கேட்டுள்ளோம். முதற்கட்டமாக பெரம்பலூர் தொகுதி எங்களுக்கு உறுதியாகியுள்ளது. பெரம்பலூர் தொகுதியில் 3-வது முறையாகப் போட்டியிட உள்ளேன். தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளேன். இந்திய ஜனநாயக கட்சிக்கு கள்ளக்குறிச்சி தொகுதியையும் கூடுதலாக ஒதுக்க வேண்டும் என பாஜகவிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இது குறித்து பரிசீலித்து ஆராய்ந்து வழங்குவதாக கூறியுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.