விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மூர்த்தி நாயக்கன்பட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் இரண்டு கட்டிடங்கள் முழுவதும் தரைமட்டமானது. ஆறு கட்டடங்கள் சேதம் அடைந்தன. தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து சிதறியதால் நள்ளிரவு 12 மணி வரை தீயை அணைக்கும் பணிகள் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டிருந்தனர்.

நள்ளிரவு என்பதால் சேதமடைந்த ஆலையை அதிகாரிகள் பார்வையிட முடியவில்லை.நேற்று காலை வெடி விபத்து நடந்த பட்டாசு ஆலையை சாத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு குருசாமி, சாத்தூர் கோட்டாட்சியர் கனகராஜ், வெம்பக்கோட்டை தாசில்தார் ஆண்டாள், மற்றும் வருவாய் துறையினர் நேரில் பார்வையிட்டனர். வெடி விபத்து குறித்து செவல்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சீனிராஜ் வெம்பக்கோட்டை போலீசில் புகார் செய்ததன் பேரில் இன்ஸ்பெக்டர் கமல் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சுப்புராஜ் (65), மனைவி ராஜேஸ்வரி (58), இவர்களுடைய மகன் அய்யப்பராஜ் (38) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.




