தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாம் அலை கட்டுக்குள் வந்ததை அடுத்து பல்வேறு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதில் முக்கியமாக மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்க முடிவு செய்யப்பட்டு , செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி, 9 10 11 12 ஆகிய வகுப்புகளுக்கு முதற்கட்டமாக பள்ளிகள் திறக்கப்பட்டு, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு பிறகு தமிழகத்தில் பல பள்ளிகளில் அடுத்தடுத்து மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருவது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. நாமக்கல், தஞ்சாவூர், பொள்ளாச்சி, திருச்சியைத் தொடர்ந்து தற்போது திருவாரூரில் 4 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி, நீடாமங்கலம் முன்னவாள் கோட்டை அரசு பள்ளி மாணவர், வலங்கைமான் அரியத்துவாரமங்கலம் அரசு பள்ளி மாணவி, திருத்துறைப்பண்டி தலைக்காடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து 4 மாணவர்களுடன் தொடர்பில் இருந்த மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.