தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாம் அலை கட்டுக்குள் வந்ததை அடுத்து பல்வேறு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதில் முக்கியமாக மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்க முடிவு செய்யப்பட்டு , செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி, 9 10 11 12 ஆகிய வகுப்புகளுக்கு முதற்கட்டமாக பள்ளிகள் திறக்கப்பட்டு, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு பிறகு தமிழகத்தில் பல பள்ளிகளில் அடுத்தடுத்து மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருவது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பட்டு ஏற்பட்டுள்ளது. பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புரவிபாளையம் அரசுப்பள்ளி மற்றும் பனிக்கம்பட்டி தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பள்ளி வகுப்பறைகளுக்கு சீல் வைக்கப்பட்டு வளாகத்தை சுத்தம் செய்யும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.