நாளை முதல் தமிழகம் முழுவதும் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பெற்றோர்களை விட மாணவர்கள் மீது தமிழக அரசு அக்கறையுடன் செயல்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது: மருத்துவ நிபுணர்களின் அறிவுறுத்தலின் படியே செப்டம்பர் 1ம் தேதி முதல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவர்களுக்கு பாதுகாப்பான முறையில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்டந்தோறும் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் அந்ததந்த பள்ளி தலைமை ஆசிரியர்களால் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து வர வேண்டும், ஒருவேளை மாணவர்களின் மாஸ்க் கிழிந்து விட்டால் உடனடியாக மாற்றுவதற்காக கூடுதலான மாஸ்க்குகளை பள்ளியில் வைக்க அறிவுறுத்தியுள்ளோம். அனைத்து அரசு பள்ளிகளுக்கும் தேவையான கிருமிநாசினி மற்றும் மாஸ்க்குகள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது தொகுதியில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். பெற்றோர்களுக்கு உள்ள அக்கறையை விட மாணவர்கள் மீது தமிழக அரசுக்கும், முதலமைச்சருக்கும் அக்கறை உள்ளது. காலை 9.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும். தொடக்கம் முதலே பாடம் நடத்தப்படாது, மாணவர்கள் உளவியல் ரீதியாக தயாரான பிறகே பாடம் நடத்தப்படும் என தெரிவித்தார்.