• Fri. Mar 29th, 2024

கள்ளக்குறிச்சி மாணவியின் செல்ஃபோனை ஒப்படைக்க உத்தரவு!!

ByA.Tamilselvan

Nov 15, 2022

கள்ளக்குறிச்சி பள்ளியில் உயிரிழந்த மாணவியின் செல்ஃபோனை விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்க பெற்றோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளி மாணவி மரணத்தில் நியாயமான விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு புலன் விசாரணை குழு மற்றும் சிபிசிஐடி ஆகியவற்றின் அறிக்கைகளை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா தாக்கல் செய்தார். மேலும், கலவரத்தில் ஈடுபட்ட 214 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மாணவி பயன்படுத்திய செல்போனை விசாரணைக்காக அவரது பெற்றோர்கள் ஒப்படைக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
மனுதாரர் ராமலிங்கம் தரப்பில் வழக்கறிஞர் சங்கரசுப்பு ஆஜராகி, தொழில்நுட்பம் வளர்ந்துள்ள காலத்தில் செல்போனை ஒப்படைத்தால் தான் விசாரணை நடத்த முடியும் என்றில்லை எனவும், அதை ஒப்படைப்பது குறித்த விளக்கத்தை மாணவியின் பெற்றோரிடம் கேட்டு தெரிவிக்க கால அவகாசம் கோரினார். மேலும் மாணவியின் உடற்கூறாய்வு முறையாக நடைபெறவில்லை என்றும் தெரிவித்தார்.
இதை கேட்ட நீதிபதி, உடற்கூறாய்வு மூலம் எப்படி இறந்தார்கள் என்பதை மட்டுமே தெரிந்து கொள்ள முடியும் என்றும், மரணத்திற்கான காரணத்தை கண்டறிய செல்போன் உரையாடல்களும் விசாரணைக்கு அவசியம் என்பதால், நியாயமான விசாரணை கேட்கும் மனுதாரர் தனது மகள் பயன்படுத்திய செல்போனை ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை டிசம்பர் 15ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *