காய்கறிச் சந்தையை முறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஏழு மாத கால திமுக ஆட்சியில் காய்கறிகளின் விலை ஏறிக்கொண்டே செல்கிறது. இந்த காய்கறிகளை விளைபவர்கள் விவசாயிகள். அப்படி என்றால் காய்கறிகளின் விலை உயர்ந்து கொண்டே செல்கின்ற இந்த தருணத்தில், விவசாயிகள் பெரிய அளவில் பயன் அடைந்து இருக்கவேண்டும். ஆனால் விவசாயிகள் பெரிய அளவில் பயன் அடைய வில்லை என்பதுதான் எதார்த்தம்.
தக்காளி விலை ஒரு கிலோ 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட போதே விவசாயிகளுக்கு 40 ரூபாய் தான் கிடைத்தது என்றும், விலை ஏற்றத்தினால் பெரிய பலன் ஏதும் விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை என்றும் கூறப்படுகிறது. நுகர்வோர்களுக்கு விலையேற்றத்தால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். காய்கறிகளை விற்பனை செய்பவர்கள் இலாபம் என்பது விற்பனையை பொறுத்தே அமைந்துள்ளது.
ஆனால் இந்த விலை ஏற்றத்தினால் அதிக பயன் அடைபவர்கள் இடைத்தரகர்கள் மட்டும்தான். லாபமோ இழப்போ அவர்களுக்கு உரிய தொகை கிடைத்து விடுகிறது. இதற்கு காரணம் காய்கறி சந்தை முறைப்படுத்தும் அமைப்பு அரசாங்கத்திடம் இல்லாததுதான்.
ஒரு தொழில் என்றால் அந்த தொழிலில் ஈடுபட்டிருக்கும் பதிவாளர்கள், மொத்த விற்பனையாளர்கள் ,சில்லறை விற்பனையாளர்கள், நுகர்வோர்கள் என அனைவரும் சமமாக பயனடைய வேண்டும். இதனையும் தற்போது தற்போது உள்ள விலையேற்றத்தையும் கருத்தில் கொண்டு காய்கறி சந்தை முறைப்படுத்தும் நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறேன் ” என்று குறிப்பிட்டுள்ளார்.