அதிமுக பொதுக்குழு குறித்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அ.தி.மு.க. சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டார். பொதுக்குழு கூட்ட முடிவுகளை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பல்வேறு மேல் முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், ஈபிஎஸ், ஓபிஎஸ் என இரண்டு தனப்பினரும் தொடர்ந்து வாதங்களை முன்வைத்தனர். அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது. இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக வழக்கு தொடர்ந்த எடப்பாடி பழனிசாமி, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட அனுமதி பெற்றார். இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தின் தீர்ப்பு இன்று வெளியானது.
அதில், ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்நிலையில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். இதனால் அதிமுக வழக்கு தொடர்ந்து பரபரப்பாகவே உள்ளது.