நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19ஆம் தேதி முடிவடைந்த நிலையில், இன்று வாக்கு எண்ணும் பணி காலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் உள்ளிட்ட ஏழு பேரூராட்சிகளில் காலை முதலே வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பேரூர் பேரூராட்சி 13ஆவது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மணி தோல்வி அடைந்ததாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்ததால் அதை தாங்க முடியாமல் அவருடைய மகள் பூத் ஸ்லிப்பை கிழித்து எரிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் உடனடியாக அங்கு வந்து அவரை சமாதானப்படுத்தினர். இந்நிலையில், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட ஏழு பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது. தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட நிலையில் இன்று முதல் திமுகவின் கோட்டையாக மாறியிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் முன்னாள் அமைச்சரும், தற்போதைய தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏவுமான எஸ்.பி.வேலுமணிக்கு பின்னடைவு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் பேசிக்கொள்கின்றனர்.
மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கொடுத்த ஆபரேஷன் கோவையை திறம்பட செய்து முடித்துள்ளதாக, ஆகா ஓஹோ என்று அறிவாலயத்திலிருந்து அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளதாக தகவல். செந்தில் பாலாஜி எந்த கட்சியில் இருந்தாலும் தனகென்று ஒரு திட்டத்தை வகுத்து வெற்றியை உருவாக்குவதில் வல்லவர் என்று மீண்டும் நிரூபித்து உள்ளார்.