‘ஒரே நாடு – ஒரே ரேஷன்” திட்ட செயல்பாட்டில், மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.
இந்தியாவில் உள்ள 21 மாநிலங்களைச் சேர்ந்த மக்கள், தொழில் நிமித்தமாக, வேலை தேடி வரும் வடமாநில இளைஞர்கள் என பல்வேறு தரப்பினரும் திருப்பூர் மாவட்டத்தில் அதிகமாக வசிக்கின்றனர். வெளி மாநிலங்களில் வசிக்கும் தொழிலாளர்களும் பயன்பெறும் வகையில், ‘ஒரே நாடு – ஒரே ரேஷன்’ திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.
திருப்பூர் மாவட்டத்தில், முதல் இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில், வெளிமாநில தொழிலாளருக்காக ரேஷன் கடைகளில் சிறப்பு விற்பனை நடக்கிறது. கடந்த மூன்று மாத நிலவரப்படி, மாநில அளவில், திருப்பூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இந்த மாதத்தில் இதுவரை, மாநில அளவில், 509 வெளிமாநில தொழிலாளர் ரேஷன் பொருள் பெற்றுள்ளனர். அவர்களில், திருப்பூர் மாவட்டத்தில் மட்டும், 458 பேர் அரிசி மற்றும் கோதுமை பெற்றுள்ளனர்.
குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள் கூறுகையில்,
‘திருப்பூரில், ‘ஒரே நாடு – ஒரே ரேஷன்’ திட்டத்தில், அதிகம் பேர் பயனடைந்துள்ளனர். அடுத்ததாக, நீலகிரி மாவட்டத்தில், 34 பேர் ரேஷன் பொருள் வாங்கியுள்ளனர்’ என்றனர்.