கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என பண்டிகை காலம் வரவுள்ளது. இதனையொட்டி பல்வேறு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை கவர அதிரடி சலுகைகளை அள்ளிவீசத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், பைக் வாங்க நினைப்பவர்களுக்கு சிறப்பு சலுகை ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரீடைல் ஃபைனான்ஸ் கார்னிவல் என்ற பெயரில் சிறப்பு திட்டத்தை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சலுகையின் கீழ் வாடிக்கையாளர்கள் பணம் எதுவும் செலுத்தாமல் பைக் வாங்கி கொள்ளலாம் என்பது தான் இதன் சிறப்பு. இந்த சலுகை டிசம்பர் 31ஆம் தேதி வரை மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் இந்த சலுகையை பயன்படுத்தி உங்களுக்கு பிடித்தமான இரண்டு சக்கர வாகனங்களை வாங்கி கொள்ளுங்கள்.
பொதுவாக பைக் வாங்கும்போது டவுன் பேமண்ட் என்ற பெயரில் குறிப்பிட்ட ஒரு தொகையை டீலரிடம் செலுத்த வேண்டி இருக்கும். அதனைப்போலவே வாகன கடன் பெறும்போது அதற்கு அதிகமான வட்டியும் செலுத்த வேண்டியிருக்கும். செயல்பாட்டு கட்டணம் என்ற பெயரில் ஒரு தொகை காலியாகிவிடும். ஆனால் ஹீரோ மோட்டோ கார்ப் தற்போது அறிவித்துள்ள இந்த சிறப்பு திட்டத்தில் மேற்கூறிய சுமை எதுவும் இல்லாமல் நீங்கள் பைக் வாங்கி கொள்ளலாம்.
அதாவது முன் பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. கடனுக்கான வட்டியும் கிடையாது. உங்களுடைய ஆதார் கார்டை மட்டுமே காட்டினால் மட்டுமே போதும். ஆதார் கார்டு விவரங்கள் சரிபார்க்கப்பட்டு பைக் வழங்கப்படும். பைக் விலை எவ்வளவு என்பதை அடுத்து வரும் மாதங்களில் செலுத்திக் கொள்ளலாம். இந்த சிறப்பு திட்டம் வாடிக்கையாளர்கள் இடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.