

குத்தாலத்தில் ரூபாய் 14 லட்சம் வாடகை செலுத்தாமல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் இடத்தை இந்து சமய அறநிலையத்துறை துறை அதிகாரிகள் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்! அப்போது மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் தடுத்து நிறுத்தி தவறாக நடவடிக்கை மேற்கொள்வதாக குற்றம்சாட்டியதால் பரபரப்பு!
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் மன்மதீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. கோயில் பின்புறம் மணவெளி தெருவில் திருக்கோயிலுக்கு சொந்தமான 3 கோடி ரூபாய் மதிப்பிலான 6 ஆயிரத்து 600 சதுர அடி பரப்பளவில் உள்ள இடம் சம்பந்தம் பிள்ளை, ராமையா பிள்ளை என்பவர்களின் வசம் உள்ளது. அந்த இடம் 10 ஆண்டுகளுக்கு முன் தியாகராஜன் என்பவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. பகுதி மாற்றம் செய்யப்படவில்லை. கமர்ஷியல் கட்டணத்தில் உள்ள அந்த இடத்திற்கு 14 லட்சம் ரூபாய் வாடகை செலுத்தாததால் கடந்த 2016ஆம் ஆண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற இணை ஆணையர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.







அதனடிப்படையில் இன்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் முத்துராமன் மற்றும் அறநிலையத் துறை வட்டாட்சியர் விஜயராகவன் முன்னிலையில் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு இடத்தை, ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த மயிலாடுதுறை திமுக பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் தவறான நடவடிக்கை மேற்கொள்வதாக குற்றம்சாட்டி ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை தடுத்து நிறுத்தி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வீட்டில் குடியிருப்பவர்களுக்கு கமர்ஷியல் கட்டணம் வசூலிப்பதாகவும், அதிகாரிகளின் தவறான நடவடிக்கையால் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. மன்மதீஸ்வரர் ஆலயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கத்திடம் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.