• Fri. Apr 19th, 2024

தி.மு.க.வில் நோ என்ட்ரி: அப்செட்டில் சரவணன்..!

Byவிஷா

Aug 16, 2022

சமீபத்தில் பா.ஜ.க.வில் இருந்து விலகிய சரவணனுக்கு தி.மு.க நோ என்ட்ரி கொடுப்பதால் அப்செட்டில் இருப்பதாக தகவல் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், நரிமேடு பகுதியில் சரவணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை என்ற பிரபல மருத்துவமனையை நடத்தி வருபவர் மருத்துவர் சரவணன். 2019 திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளரை தோற்கடித்து சட்டமன்ற உறுப்பினரானார். திமுக தலைமை இவருக்கு மாநில மருத்துவ அணியில் பொறுப்பு வழங்கி அழகு பார்த்தது.
2021 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தி.மு.க.வில் வாய்ப்பு வழங்கப்படாததால், அதிருப்தியில் இருந்த சரவணன் 2021 மார்ச் 14-ஆம் தேதி பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டு அன்று மாலையே சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பைப் பெற்று, தேர்தலில் எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவினார். அதன் பின்னர், மதுரை மாநகர் மாவட்ட தலைவர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. கட்சியில் மாநில பொறுப்பு அல்லது தேசிய அளவில் வாரிய பொறுப்பு கிடைக்கும் என்று தீவிரமாக செயல்பட்ட சரவணனுக்கு ஏமாற்றமே மிஞ்சியதாக சொல்லப்படுகிறது.
ஆனாலும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் குட் புக்கில் இடம் பெற்றிருந்த சரவணனுக்கு கட்சியில் முழு சுதந்திரம் வழங்கப்பட்டது. மதுரையில் சூறாவளி போல் சுழன்று கட்சிக்கு ஆள் சேர்ப்பது. பாஜகவின் கொள்கைகளை பரப்புவது உள்ளிட்ட வேலைகளை தீவிரமாக செய்து வந்தார். சரவணனின் செயல்பாடுகள் திமுகவினருக்கு எரிச்சலூட்டியது. இதனால், ஏற்கனவே இருந்த கழக உடன்பிறப்புகள் நட்பையும் இழந்தார்.
இந்த நிலையில் தான் கடந்த 13-ம் தேதி மதுரை விமான நிலையத்தின் வெளியே அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசிய சம்பவம் நடைபெற்றது. இந்த விவகாரத்தில் பாஜக மாவட்ட தலைவரான சரவணன் அமைச்சர் பிடிஆர் கடும் கோபத்தில் இருந்தார். அவரை ஆசுவாசப்படுத்தும் விதமாக வீட்டிற்கு நேரில் சென்ற சரவணன் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து சரணடைந்ததாக சொல்லப்படுகிறது.
அப்போது, கடுமையாக எச்சரிக்கை விடுத்த அமைச்சர் “பாஜகவின் கீழ்தரமான அரசியல் தமிழகத்தில் செல்லுபடியாகாது” என்று கூறியுள்ளார். அதோடு, நீங்கள் நன்று படித்தவர், திறமையான மருத்துவர் உங்களுக்கு அந்த கட்சி சரிபட்டு வராது என்று அறிவுரையும் வழங்கியதாக கூறப்படுகிறது.

அமைச்சரை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த சரவணன், பாஜக மத அரசியல் செய்வதாகவும் அது தனக்கு சரிபட்டு வராது என்பதால் கட்சியில் இருந்து விலகப்போவதாகவும் கூறினார்.
அப்போது மீண்டும் திமுகவுக்கு திரும்ப வாய்ப்புள்ளதா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு
அப்படி சென்றால் என்ன தவறு அது என் தாய் கட்சி 15 ஆண்டுகள் உழைத்துள்ளேன் என்று பதிலளித்தார். சரவணனின் இந்த திடீர் முடிவு பாஜகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதோடு, மறுநாள் காலை கட்சியின் விதிகளை மீறியதாக சரவணனை நீக்கி அறிக்கை வெளியிட்டார் பாஜக தலைவர் அண்ணாமலை.
இந்நிலையில், மருத்துவர் சரவணனை மீண்டும் திமுகவில் சேர்த்துக்கொள்ள வாய்ப்புள்ளதா? அவரால் கட்சிக்கு என்ன சாதகம் என்று விசாரித்தோம் அப்போது “சரவணன் நல்ல மனிதர் தான். அவரது மருத்துவமனை மூலம் பல ஏழை மக்களுக்கு இலவச சிகிச்சை செய்துள்ளார் அதனால் அவருக்கு நற்பெயர் உள்ளது. ஆனால் அரசியல் ரீதியாக அப்படி ஒன்றும் நல்ல பெயர் இல்லை. சரவணனை ஒரு அரசியல் துரோகி என்றும் கட்சி நிர்வாகிகளை அரவணைத்து செல்லமாட்டார் என்றும் குற்றம்சாட்டுகின்றனர். திமுகவில் மாவட்ட செயலாளர்கள் அவருக்கு எதிராக உள்ளனர். குறிப்பாக தற்போதுள்ள மாவட்ட செயலாளர் பி.மூர்த்தி, கோ.தளபதி, பொன்முத்து ராமலிங்கம், மணிமாறன் ஆகிய யாருக்குமே சரவணனை பிடிக்காது. அவரை கட்சியில் சேர்த்துக்கொள்ள விரும்பமாட்டார்கள்” என்றனர்.
ஆனாலும், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் சரவணனை திமுகவில் சேர்த்துக்கொள்ளலாம் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே கட்சி நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் உள்ளனர். இதில் சரவணனை அவர் கொண்டு வந்தால் உங்கள் மீது உள்ள அந்த வெறுப்புணர்வு அதிகமாகும் என்று அமைச்சருக்கு நெருங்கிய வட்டாரங்கள் ஆலோசனை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால், அப்செட்டில் உள்ள சரவணன் கொஞ்சம் அவரசப்பட்டு முடிவு எடுத்துவிட்டோமோ என்ற மனநிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *