• Mon. Apr 20th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

மக்களவையில் கடும் அமளி : பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்

ByP.Kavitha Kumar

Feb 1, 2025

நாடாளுமன்ற மக்களவை இன்று காலை 11 மணிக்கு கூடியது. அப்போது எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, அனைவரும் அமைதி காக்குமாறு சபாநாயகர் ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்தார். எனினும், எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 8வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அப்போது அவர் பேசுகையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முடுக்கிவிடுவது, ஒருங்கிணைந்த வளர்ச்சியை உறுதி செய்வது, தனியார் தொழில்துறை முதலீட்டு வளர்ச்சி, குடும்பங்களின் எதிர்பார்ப்பை உறுதிப்படுத்துவது, வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தினரின் சக்தி ஆகியவற்றில் மத்திய அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் அறிவிப்பில் வெளியான முக்கிய அம்சங்கள் வருமாறு:
வருமான வரி தாக்கல் செய்யப்படுதல் எளிதாக்கப்படும்.
மூத்த குடிமக்களுக்கு ரூ.50 ஆயிரம்வரை வரி பிடித்தம் கிடையாது தனிநபர் வருமான வரி சீர்திருத்தங்கள் நடுத்தர வர்க்கத்தினர் நலனை சார்ந்ததாக இருக்கும். வீட்டு வாடகைக்கான டிடிஎஸ் பிடித்தத்துக்கான வருடாந்திர வரம்பு ரூ.2.4 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தப்படுகிறது. வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் 4 ஆண்டுகளாக நீட்டிக்கப்படுகிறது.

புதிய வருமான வரி முறையின்படி ரூ.12 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வரி செலுத்தத் தேவையில்லை. பழைய வரி விதிப்பு வருமான வரி முறையிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி ரூ.4 லட்சம் வரை – வரி இல்லை.
ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை 5 சதவீத வரியும்,ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 10 சதவீத வரியும்,ரூ.12 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை 15 சதவீத வரியும் ரூ..16 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை – 20 சதவீத வரியும், ரூ.20 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரை – 25 சதவீத வரியும், ரூ.24 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுவோருக்கு 30 சதவீத வரியும் விதிக்கப்படும்.

புற்றுநோய், இன்னும் பிற அரிதான நோய்களுக்கான 36 வகையிலான உயிர் காக்கும் மருந்துகளுக்கு சுங்க வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அதே வேளையில் உயிர்காக்கும் 6 மருந்துகளுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. மேலும். பின்னலாடைகளுக்கு இறக்குமதி வரிச் சலுகை,தோல் பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்க தோல் இறக்குமதிக்கு வரிச் சலுகை. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை நீட்டிக்கப்படுகிறது.

ஐஐடி, ஐஐஎஸ்சி உயர் கல்வி நிறுவனங்களில் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளுக்காக 10 ஆயிரம் ஃபெலோஷிப்கள் வழங்கப்படும். வேளாண் உற்பத்தியை அதிகரிக்க மாநில அரசுகளுடன் இணைந்து புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்

.நாடு முழுவதும் ஐஐடி கல்வி நிறுவனங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். ஐஐடி பாட்னா விரிவுபடுத்தப்படும். இதன்மூலம் கூடுதல் மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்படும். நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் 10,000 சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படும். ஜல்ஜீவன் திட்டம் 2028 வரை நீட்டிக்கப்படுகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் மாநிலங்களில் புதிதாக 100 விமான நிலையங்கள் உருவாக்கப்படும். செயற்கை நுண்ணறிவை கல்வியில் ஊக்குவிக்கும் வகையில் ரூ.500 கோடி முதலீட்டில் ஒரு மையம் உருவாக்கப்படும்.அடுத்த 5 ஆண்டுகளில் 50 ஆயிரம் ‘அடல் ஆய்வகங்கள்’ அரசுப் பள்ளிகளில் உருவாக்கப்படும்.

5 தேசிய திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும். காப்பீட்டுத் துறைகளுக்கான அந்நிய நேரடி முதலீட்டுக்கான வரம்பு 100 சதவீதமாக உயர்த்தப்படுகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.