தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் இயக்குநர் கே.பாக்யராஜ் தலைமையில் ‘இமயம் அணி’ என்ற பெயரில் ஒரு அணி போட்டியிடுகிறது. இந்த அணியினரின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் புதிய கீதை படத்தின் இயக்குநரும், நடிகருமான இயக்குநர் ஜெகன் பேசுகையில், “ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. 10 ஆண்டுகளாக இந்த சங்கத்தில் இருக்கிறேன். இப்போதுதான் முதன்முறையாக ஒரு வேட்பாளர் அறிமுக விழா பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நடக்கிறது. எங்கள் சங்கம் அந்தளவுக்கு மிகவும் பின் தங்கி இருக்கிறது. சங்கம் பற்றி சமூக வலைத்தளங்களில் பேசினால் தகுதி நீக்கம் என சங்கத்தில் ஒரு சட்டம் உள்ளது. பத்திரிகைகளை சந்திக்கவே கூடாது என சொல்வது சர்வாதிகாரம். இந்த விதிமுறையை மீறி பத்திரிகையாளர்கள் முன்னிலையிலேயே இந்த நிகழ்வை நடத்தும் தலைவர் கே.பாக்யராஜ் அவர்களுக்கு நன்றி.
பாக்யராஜ் எதற்கும் துணிந்தவர். இங்கு வேலை பார்ப்பவர்கள் 75 சதவீதம் மெம்பராக இல்லாதவர்கள். இதையெல்லாம் யாரும் கண்டுகொள்வதில்லை. எதிரணியில் இருப்பவர்கள் “நாங்கள் நன்றாக வேலை செய்கிறோம். ஆனால் வேறு யாருமே எங்களைப் போல வேலை செய்ய மாட்டார்கள்” என நினைக்கிறார்கள்.. இது மாற வேண்டும். ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பாகவும் ஒரு அறிக்கையை சமர்ப்பிப்பார் செல்வமணி. ஆனால், தேர்தலுக்கு பின் அவையெல்லாம் காணாமல் போய் விடும். என்ன நாடகம் இது என்று தெரியவில்லை. தேர்தல் என்றால் எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும், இந்த டீம் ஜெயித்தால் சங்கத்திற்கு நல்லது, இல்லாவிட்டால் எங்களுக்கு நல்லது…” என்றார்.