ரூசா மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் இணைந்து வழங்கும் 3 நாள் தேசிய அளவிலான பயிற்சி பட்டறை “செய்தி தயாரிப்புத் திறன்” என்னும் தலைப்பில் தொடங்கியது.
பிப்ரவரி மாதம் 22 ,23, 24 ஆகிய மூன்று நாட்களில் நடக்கும் தேசிய அளவிலான பயிற்சி பட்டறையை ,மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் இதழியல் துறை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது. அதன்படி, தொடங்கப்பட்ட இந்த பயிற்சி பட்டறையின் முதல் நாளில் சிறப்பு விருந்தினராக சன் செய்திகள் ஊடகத்தின் தலைமை ஆசிரியர் எம். குணசேகரன் கலந்து கொண்டு மாணவர்களுடன் பேசினார். இந்த நிகழ்வில் இதழியல் துறை தலைவரும் பேராசிரியையுமான முனைவர். ஜெனிபா செல்வின் வரவேற்று பேசினார். அதோடு, இந்த 3 நாள் தேசிய அளவிலான பயிற்சி பட்டறையின் சாராம்சத்தை சுருக்கமாக விளக்கினார். பின், பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெ. குமார் தலைமையுரை வழங்கினார். அவர் செய்தியின் உட்கருத்துகள் எப்படி வலுவாக இருக்க வேண்டும் என்பது பற்றி மாணவர்களிடம் பேசினார். அதைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினரான எம். குணசேகரன் ஊடகத்துறை எத்துனை சுவாரஸ்யங்கள் நிறைந்தது என்பது பற்றியும், தொழில்நுட்ப வளர்ச்சி தற்போதைய மாணவர்களுக்கு ஊடகத்துறையில் ஏற்படுத்தி கொடுத்திருக்கும் வாய்ப்புகள் பற்றியும், செய்தி தயாரிப்புக்கு தேவையான திறன் மற்றும் கருத்துவண்மையின் முக்கியத்துவம் பற்றியும், பத்திரிகையாளர்களுக்கு இருக்க வேண்டிய பண்புகள் பற்றியும் மாணவர்களிடம் பேசினார்.
பின்னர், மதுரை காமராசர் பல்கலைக்கழக இதழியல் துறை மாணவர்களின் ஆவணப்படங்கள் சிறப்பு விருந்தினர் எம். குணசேகரனால் வெளியிடப்பட்டது. அந்த ஆவணப்படங்களில் ஒன்றான ‘வேர்களின் இசை’ மாணவர்களுக்கு திரையிடப்பட்டது. அதைத் தொடர்து செய்தி தயாரிக்கும் திறன் சார்ந்து சிறப்பு விருந்தினர் எம். குணசேகரன் மாணவர்களுடன் கலந்துரையாடினார். பயிற்சி பட்டறையின் முதல் பகுதியின் இறுதியில் மதுரை காமராசர் பல்கலைக்கழக இதழியல் துறை பேராசிரியர். பாலசுப்பிரமணியன் நன்றியுரை வழங்கினார். இந்த பயிற்சி பட்டறையில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் , பாத்திமா கல்லூரி, அமெரிக்கன் கல்லூரி, திண்டுக்கல் அனுக்ரஹா கல்லூரி மற்றும் பல கல்லூரிகளிலிருந்து மாணவர்கள், பேராசிரியர்கள் என 200-க்கும் மேற்கொண்டோர் கலந்து கொண்டனர்.