நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கியது. இந்த தொடர் ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த 2 நாட்களாக இரு அவைகளும் எதிர்க்கட்சிகளின் அமளியால் முடங்கின.
இந்த சூழலில், இன்றைய கூட்டத்தொடர் கூடவுள்ளது. ராஜ்யசபா கூடிய பின்னர், பிரபல முன்னாள் தடகள வீராங்கனையான பி.டி. உஷா ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்று கொள்கிறார். முன்னதாக, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை பி.டி.உஷா நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது, ராஜ்யசபா எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட உஷாவுக்கு, நட்டா வாழ்த்து தெரிவித்தார். பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, திரைக்கதை எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத் மற்றும் மத தலைவர் வீரேந்திர ஹெக்டே ஆகியோரை ராஜ்யசபா எம்பிக்களாக ஆளும் பாஜக நியமனம் செய்துள்ளது. தென்னிந்தியாவில் தடம் பதிக்கும் வகையில் பாஜக இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.