கீரனூர் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக பட்டதாரியிடம் பணமோசடி செய்த வழக்கில், இரண்டு அரசு ஊழியர்கள் உட்பட மூவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் 2 பேர் தலைமறைவாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள உடையாளிப்பட்டி கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயபால். இளநிலை பட்டதாரியான இவரிடம் கடந்த 2019 ஆம் ஆண்டு கீரனூர் காந்தி நகரைச் சேர்ந்த கண்ணன் மற்றும் அன்னவாசல் இந்திரா நகரைச் சேர்ந்த சங்கர், சுதாகர், பாண்டி ஆகிய மூவரும் அரசு வேலை வாங்கித் தருவதாக 2,52,000 ரூபாய் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் அரசு வேலை வாங்கிக் கொடுக்காமல் அவர்கள் மூவரும் ஜெயபாலை ஏமாற்றியதாக தெரிய வருகிறது. இதனையடுத்து ஜெயபால் பணத்தை திரும்ப கேட்டதற்கு தர மறுத்ததால் இதுகுறித்து கீரனூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் மூவர் மீதும், பணமோசடி வழக்குப்பதிவு செய்த போலீசார், இடைத்தரகராக செயல்பட்ட சங்கரை கைது செய்து மற்ற இரண்டு குற்றவாளிகளையும் தேடி வருகின்றனர்.
தலைமறைவாக உள்ள சுதாகர், பாண்டி ஆகிய இருவரும் அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஊழியர்களாக பணியாற்றி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.