• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சர்வதேச மகளிர் தினம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈபிஎஸ் வாழ்த்து

ByP.Kavitha Kumar

Mar 8, 2025

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சர்வதேச மகளிர் தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மற்றும் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் மகளிர் தின வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில், “அன்புச் சகோதரிகள் அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார். மேலும், மகளிருக்காக திமுக அரசு செயல்படுத்தி உள்ள திட்டங்களை பட்டியலிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு மகளிர் தின வாழ்த்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “அன்பை அள்ளிக் கொடுப்பதில் அன்னையாக, அறிவை அருளும் ஆசிரியையாக, பாசத்தோடு அரவணைக்கும் சகோதரியாக, மனதோடு மனம் கலந்த மனைவியாக, மகளாக, நட்பைக் காட்டும் தோழியாக, தர்மத்தைச் சொல்லும் பாட்டியாக என, வாழ்நாள் முழுவதும் நம்மோடு பயணிக்கின்றவர்கள்தான் பெண்கள்.

தமிழ் கூறும் நல்லுலகில் வாழும் மகளிர் அனைவருக்கும் எனது உளப்பூர்வமான சர்வதேச மகளிர்தினம் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே சமயம், இன்றைக்கு தமிழ்நாடு பெண்களுக்கு துளி கூட பாதுகாப்பு இல்லாத மாநிலமாக மாறியிருப்பது மிகுந்த கவலைக்குரியது. சிறுமி முதல் மூதாட்டி வரை, எந்தவொரு பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கத் முடியாத ஒரு ஆட்சியாக திமுக உள்ளது.

அன்புச் சகோதரிகளே- உங்களுக்காக, உங்கள் பாதுகாப்புக்காக என்றைக்கும் அதிமுக போராடும். 2026-ல் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும், இன்று நீங்கள் அச்சத்துடன் இருக்கின்ற நிலை மாறி, மிகவும் பாதுகாப்புடன், சுதந்திரமாக செயல்பட்டு, பல சாதனைகளைப் புரிகின்ற காலமாக நம் ஆட்சிக்காலம் நிச்சயம் இருக்கும்” என்று கூறியுள்ளார்.