• Fri. Sep 11th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் எலும்பு வங்கியை துவக்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Byகாயத்ரி

Dec 21, 2021

தென் தமிழகத்தில் முதல்முறையாக, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் எலும்பு வங்கி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார்.

வாகன விபத்துக்களின் போது கை, கால்களில் முறிவு ஏற்படுவோருக்கும், எலும்பு புற்றுநோய் மற்றும் பல்வேறு வகை கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட எலும்புகளை மாற்றுவதற்கும் தமிழகத்தில் சென்னை மற்றும் கோவை அரசு மருத்துவமனைகளில் எலும்பு வங்கி செயல்பட்டு வருகிறது.தென் தமிழகத்தில் எலும்பு வங்கி இல்லாததால் எலும்பு முறிவு மற்றும் எலும்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். மேலும், தனியார் மருத்துவமனைகளிலும் இதுபோன்ற வங்கி வசதி இல்லை.

இதையடுத்து, தென் தமிழகத்தில் எலும்பு வங்கி அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தது. பின்னர், 2017ம் ஆண்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் எலும்பு வங்கி அமைக்க சென்னை மருத்துவக் கல்வி இயக்குநரகம் அனுமதி வழங்கியது.கடந்த செப்டம்பர் மாதம், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் எலும்பு வங்கி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. இந்நிலையில், எலும்பு வங்கிக்கான பணிகள் முழுமையாக முடிவடைந்ததை அடுத்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (21ம் தேதி) எலும்பு வங்கியை திறந்து வைத்து பயன்பாட்டிற்குக் கொண்டுவந்தார்.

இதன் மூலம், தென் தமிழக மக்கள் சென்னை உள்ளிட்ட மற்ற மாவட்டங்களுக்குச் செல்லாமல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையிலேயே எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை பெற முடியும்.