• Fri. Apr 26th, 2024

உலகக்கோப்பையை வென்றபின் மெஸ்சி பேட்டி

உலகக்கோப்பை கால்பந்தில் இறுதி ஆட்டத்தில், பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் அர்ஜென்டினா 4-2 என்ற கணக்கில் பிரான்சை தோற்கடித்து உலக கோப்பையை கைப்பற்றியது. அர்ஜென்டினா அணி உலககோப்பையை வெல்வது இது 3-வது முறையாகும். இதற்கு முன்பு 1978 மற்றும் 1986-ம் ஆண்டுகளில் வென்று இருந்தது. மெஸ்சியின் கனவு நனவானது உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டார் மெஸ்சியின் ஏக்கமும் தணிந்தது. அவருக்கு இதுவே கடைசி உலகக் கோப்பை தொடர் என்பது நினைவு கூரத்தக்கது. இந்த வெற்றியால் தென்அமெரிக்க நாடான அர்ஜென்டினா தேசமே கொண்டாட்டத்தில் குலுங்கியது. இந்த நிலையில், கோப்பையை வென்றபின் அர்ஜெண்டினாவுக்காக தொடர்ந்து விளையாட உள்ளதாக மெஸ்சி கூறியுள்ளார். உலகக்கோப்பை வென்றது குறித்து மெஸ்சி கூறியதாவது, உலகக் கோப்பையை வெல்வதை தனது வாழ்நாள் லட்சியமாக கருதினேன். உலகக்கோப்பையை வென்றது மகிழ்ச்சியளிக்கிறது. தனது நாட்டிற்காக தொடர்ந்து விளையாடுவேன். உலக சாம்பியனாக இன்னும் சில போட்டிகளை அனுபவிக்க விரும்புகிறேன்.
2014 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஜெர்மனியிடம் தோற்றது உட்பட, கால்பந்தின் மிகப்பெரிய களத்தில் பல ஏமாற்றங்களை சந்தித்தேன். ஆனால், தனக்குரியை நேரம் ஒருநாள் கண்டிப்பாக வரும் என்று உணர்ந்தேன். இந்த தொடர் இப்படி முடிவது ஆச்சரியமாக இருக்கிறது. கடவுள் எனக்கு இதை வழங்கப் போகிறார் என்று நான் முன்பு சொன்னேன். ஏன் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் இந்த நேரத்தில் அது நடக்கும் என்று நான் உணர்ந்தேன். இவ்வாறு அவர் கூறினார். ஆட்டத்திற்குப் பிறகு மெஸ்ஸி தனது குடும்பத்தினரையும் அணியினரையும் கட்டிப்பிடித்தார். 35 வயதான லியோனல் மெஸ்சி, அர்ஜென்டினாவுக்காக 172 போட்டிகளில் விளையாடியுள்ளார், 2005 இல் அறிமுகமானதில் இருந்து 98 கோல்களை அடித்துள்ளார். உலகக்கோப்பையை வெல்வதே தனது வாழ்நாள் லட்சியமாக கருதி ஒவ்வொரு போட்டியிலும் விளையாடி வந்த மெஸ்சி, கடைசியில் உலகக்கோப்பையை தனது கையில் ஏந்திய தருணத்தை உலகம் முழுவதும் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *