எதிர்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் சரியான முறையில் ஜனநாயக ரீதியில் முடிவுகள் இருக்கும் என சபாநாயகர் அப்பாவு பேட்டி
சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்ததினத்தை முன்னிட்டு நெல்லையில் அரசு சார்பில் சபாநாயகர் அப்பாவு, மாவட்ட கலெக்டர் விஷ்ணு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இதை தொடர்ந்து சபாநாயகர் செய்தியாளர்களிடம் பேசும்போது.. – முதல்-அமைச்சர் அறிவித்தபடி ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் வ.உ.சி. மணி மண்டபத்தில் ஒலி, ஒளி காட்சிகள் மூலம் அவரது வரலாற்றை அனைவரும் காணும் வகையிலான திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். அ.தி.மு.க விவகாரம் நாட்டுக்கு முக்கியமான விசயமல்ல. அ.தி.மு.க.வில் நடப்பது உட்கட்சி விவகாரம். அதற்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அ.தி.மு.க.வில் பல பிரிவுகளாக அவர்கள் உள்ளனர். எந்த பிரிவு சரி, தவறு என்பது குறித்து நீதிமன்றத்தை அவர்கள் நாடி உள்ளனர். அதற்கு மேல் தேர்தல் ஆணையம் உள்ளது. இந்த ஆட்சியில் சட்டமன்றம் ஜனநாயக முறைப்படி நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். எதிர்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. கொறடா கொடுத்த மனு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது சட்டப்பேரவை கூடும்போது தெரியும். எதிர்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் சரியான முறையில் ஜனநாயக ரீதியில் முடிவுகள் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.