• Mon. Jul 20th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

குழாயடி சண்டை . . .ஆளுநரை பிளாக் செய்த மம்தா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிஅந்த மாநில ஆளுநர் ஜகதீப் தன்கரை ட்விட்டரில் பிளாக் செய்திருக்கும் சம்பவம் அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மேற்கு வங்க பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமனம் செய்வது தொடர்பாக மம்தா பானர்ஜிக்கும், அந்த மாநில ஆளுநர் ஜகதீப் தன்கருக்கும் இடையே நீண்ட நாள்களாகவே பனிப்போர் நிலவி வருகிறது. ஆளுநர் ஒப்புதல் இல்லாமல் மாநில அரசு துணை வேந்தர்களை நியமிப்பதாக ஜக்தீப் தன்கர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். மம்தாவும் அதற்கு எதிர்வினையாற்றி வருகிறார்.இது நாளுக்கு நாள் குழாயடிசண்டையாக நீடித்து வந்துள்ளது. ஆளுநர் ஜக்தீப் தன்கரைத் திரும்பப் பெற வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு மம்தா கடிதமும் எழுதியிருந்தார்.

அதையடுத்து, மகாத்மா காந்தியின் 74-வது நினைவு தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஜகதீப் தன்கர், மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். அதற்கு, மேற்கு வங்க மாநிலத் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஆகியோருக்கு ஆளுநர் மிரட்டல் விடுத்ததாக திரிணாமுல் காங்கிரஸ் மேலிடம் குற்றம்சாட்டியது. இந்த நிலையில், ஆளுநரின் ட்வீட்டுகள் தனது அமைதியைக் குலைக்கும் வகையில் இருப்பதாகக் கூறி ஆளுநர் ஜகதீப் தன்கரை ட்விட்டரில் பிளாக் செய்திருக்கிறார் முதல்வர் மம்தா பானர்ஜி. மம்தாவின் இந்த செயல் அரசியல் அரங்கில் பேசு பொருளாகியிருக்கிறது.